• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமைச்சர்களின் தேவைக்கேற்ப செயற்படப்போவதில்லை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இலங்கை

நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

எப்பாவல சித்தார்த்த மத்திய கல்லூரியின் 150 ஆவது ஆண்டுபூர்த்தி விழா நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் புதிய கல்வி முறைக்கான அவசியம் தோன்றியுள்ளது. அதற்கமைய அடுத்துவரும் 20 – 30 ஆண்டுகளுக்கு பொருத்தமான வகையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

புதிய தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட விடயங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

மேலும், 1989 இல், தொழில் வாய்ப்புக்களை இலக்கு வைத்து ‘அசோசியேட்’ பட்டம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு அக்காலத்தில் இருக்கவில்லை.

அதனை தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறேன்.

இலங்கை உலகிற்கு ஒரு பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும். கல்விக் கொள்கையை அரசியலுக்கு அடிபணிய இடமளிக்கக்கூடாது.

மேலும் அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவும் இடமளிக்க கூடாது. கல்விக் கொள்கையை சட்டமாக்கி அதனை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பொருளாதார சரிவுக்கு பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் இந்நேரத்தில் நாட்டின் துரித அபிவிருத்திக்கான புதிய கல்வி முறையொன்று அவசியமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply