• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் மாஸ் காட்டும் சீன கண்டுபிடிப்பு

இணையத்தில் பல்வேறு பொருட்களை வாங்க உருவாக்கப்பட்ட சீனாவின் இணையதளம், டவ்பவ். சீனாவை தளமாக கொண்டு இயங்கும் புகழ் பெற்ற பன்னாட்டு இணையவழி வணிக முன்னணி நிறுவனமான அலிபாபாவிற்கு சொந்தமான டவ்பவ், சீனாவின் ஹேங்ஜவ் நகரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

1879-ல் ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து, பவுதிகத்தில் உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்று சிறப்பான அறிவு பெறுவதற்கு ஒரு மெய்நிகர் பொருளை "ஐன்ஸ்டீனின் மூளை" எனும் பெயரில் இந்நிறுவனம் விற்பனை செய்கிறது. இது போன்ற விளம்பரங்களில் வழக்கமாக மருந்து, மாத்திரைகள் அல்லது சிப் போன்றவைதான் பெரும்பாலும் விற்கப்படும். ஆனால், முதன்முறையாக ஒரு மெய்நிகர் பொருள் வடிவில் அறிவை மேம்படுத்தும் வழி என இது பிரபலப்படுத்தப்படுவதால் உலகெங்கிலும் 20 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இதை தற்போது வரை வாங்கியுள்ளனர்.

இந்திய மதிப்பில் ஒரு யூனிட் ரூ. 1-ல் இருந்து ரூ. 12 வரை விற்கப்படுகிறது. இது ஐன்ஸ்டீனின் புகைப்படத்துடன் விற்கப்படுவதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர். "எங்கள் தயாரிப்பு மெய்நிகர் வடிவில் இருக்கும். எங்களுக்கு நீங்கள் அதற்கான தொகையை செலுத்திய பிறகு நீங்கள் சில காலம் காத்திருக்க வேண்டும். அனேகமாக ஓரிரவு தூக்கத்திற்கு பிறகு உங்கள் தலையில் ஐன்ஸ்டீன் போன்று அறிவு வளர்ந்திருப்பதை நீங்களே உணர்வீர்கள்" என இதன் விளம்பரங்களில் ஒன்று தெரிவிக்கிறது. பயனாளிகளில் ஒரு சிலர் இப்பொருள் குறித்து நேர்மறையாக கருத்து தெரிவித்துள்ளனர். "எனக்கு சிந்திக்கும் திறனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என ஒரு பயனாளி தெரிவித்துள்ளார்.

ஆனால், பல பயனாளிகள் இதற்கு எதிர்மறையாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். "இதனை வாங்கிய பிறகுதான் நான் செய்தது முட்டாள்தனம் என தெரிய வந்தது. அதை உணர்ந்ததால் முட்டாளாக இருந்த நான் தற்போது அறிவாளியாகி விட்டேன்." என ஒரு பயனர் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். "மனிதர்களின் உணர்வுகளை திறம்பட நிர்வகிக்க இது உதவும். குறைந்த செலவில் இது போன்று உணர்வுபூர்வமான அனுபவம் கிடைப்பது பலரும் ரசிக்கின்றனர். அதனால் இது அதிகம் விற்கப்படுகிறது. பயனாளிகளுக்கு இது ஒரு வேடிக்கையான ரசிக்கும் அனுபவமாக இருக்கும். அவ்வகையில் இது பயனுள்ள பொருள்" என்கிறார் சீனாவின் உளவியல் நிபுணர் ஒருவர்.

Leave a Reply