• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உன்னிடம் மயங்குகிறேன், உள்ளத்தால் நெருங்குகிறேன் 

சினிமா

இசையமைப்பாளர் V குமார், இயக்குநர் காரைக்குடி நாராயணன் பாடகர் K J யேசுதாஸ் ஆகியோர் இருக்கும் இப் புகைப்படம் பற்றிக் காரைக்குடி நாராயணன் அவர்கள் "குங்குமம்" இதழில் பின்வருமாறு சொல்லியுள்ளார்;

நான் கதை, வசனம் எழுதிக் கமல், சிவகுமார், ஜெயசித்ரா நடித்த "தேன் சிந்துதே வானம்" படத்தின் பாடல் பதிவின் போது எடுத்த படமிது. வருஷம் 1973 அல்லது 1974 என்று நினைக்கிறேன். கம்போஸிங் ஒரு நாட்டில், ரெக்கார்டிங் ஒரு நாட்டிலென்று ஒரு பாடல் உருவாவதற்கு இன்றைக்குப் பல நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்தக் காலத்தில் உடனே கம்போஸிங், அப்போதே பாடல் பதிவென்று எல்லாமே சுடச் சுட நடந்து விடும். "தேன் சிந்துதே வானம்" படத்தில் ஜெயசித்ராவுக்காகச் சிவகுமார் பாடுவது போன்ற ஒரு பாட்டு. தி.நகர், சரவண முதலி தெருவிலிருந்த இசையமைப்பாளர் குமாரின் வீட்டிலேயே பாடல் கம்போஸ் செய்யப்பட்டு, அதற்கான பல்லவிகளை எழுதிக் கொடுத்தார் கவிஞர் வாலி. மறுநாள் ஏவி.எம் ரெக்கார்டிங் தியேட்டரில் ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சரணத்தை வாலி அரை மணி நேரத்தில் எழுதிக் கொடுக்க, இரண்டே டேக்குகளில் அந்த அற்புதப் பாடலை ரசித்து, லயித்துப் பாடி முடித்தார் யேசுதாஸ். எப்போது கேட்டாலும் செவியில் தித்திக்கும் அந்தப் பாடல் தான் "உன்னிடம் மயங்குகிறேன்" பாடல். "என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாட்டு" என்று யேசுதாஸ் இன்றைக்கும் சொல்லக் கூடிய பாட்டு அது. ஒலிநாடா வருவதற்கு முந்தைய கால கட்டமென்பதால், இசைத் தட்டு வடிவத்தில் வெளி வந்து சக்கை போடு போட்டது. சங்கர் ஜெய்கிஷன் இசையில் "லவ் இன் டோக்கியோ" என்ற இந்திப் படத்தில் இடம் பெற்ற "சயோனரா சயோனரா" பாடலைப் போல இருப்பதாகச் சொல்லி, யேசுதாஸ் மெய் மறந்து பாடிக் கொடுத்த அந்தப் பாடல் படத்துக்குப் பெரிய பலமாக அமைந்தது. "உன்னிடம் மயங்குகிறேன்" பாடலில் இன்னொரு விசேஷமும் மறைந்திருக்கிறது. இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன் இந்தப் பாடலுக்கு கிடார் வாசித்தார்...... நன்றி குங்குமம்
 

Leave a Reply