130 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
இலங்கை
யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 43 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெற்றிலைக்கேணி, உடுத்துறைக்கு அண்மித்த கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போதே படகொன்றில் இருந்து குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 130 கிலோ 600 கிராம் (ஈரமான நிலையில்) கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் அவை 61 சிறு பொதிகளாக பொதி செய்யப்பட்டு 03 சாக்குகளில் அடைக்கப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கஞ்சாவினை கடத்துவதற்கு முயன்ற சந்தேக நபர் ஒருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதுடையவர் என்றும் அவர் யாழ்ப்பாணம், உடுத்துறையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.