• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

இலங்கை

புத்தளம் மாவட்ட இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற   இறால் பண்ணை உரிமையாளர்களுடனான  விசேட கலந்துரையாடலின் போதே  அவர் இதனைத்  தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பின் போது இறால் பண்ணை உரிமையாளர்கள் தாம்  எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்துத் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர்” இலங்கை தற்போது முகங்கொடுத்த வரும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டுக்கு டொலர்களைப் பெற்றுத் தரக்கூடிய இறால் வளர்ப்பு துறையை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

அத்துடன் அண்மையில் தான் அதிகாரிகள் சகிதம் புத்தளம் மாவட்டத்திலுள்ள இறால் பண்ணைகளுக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததாகவும் இதன்போது ஒருசில இறால் பண்ணைகளின் செயற்பாடுகள் தமக்கு திருப்தி அளிக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் களப்பு பிரச்சினையையும் இறால் பண்ணைகளின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று குழப்பிக் கொள்ளக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப் பிரச்சினைகளைத்  தீர்த்து வைப்பதற்காக நாரா, நக்டா, சிலாடா மற்றும் கடற்றொழில் அமைச்சின் நிபுணர்கள் அடங்கிய விசேட குழுவொன்றை அமைப்பதற்கு நவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, நாரா, நக்டா, சிலாடா நிறுவனங்களின் உயரதிகாரிகள், முன்னாள் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, மற்றும் புத்தளம் மாவட்ட இறால் பண்ணை உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply