• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மரணத்தை தள்ளிப்போட தினமும் 4,000 அடிகள் நடக்க வேண்டும் - ஆய்வு

எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. நடைபயிற்சி குறைந்த அழுத்தத்தை எலும்புகளுக்கும் தசைகளுக்கும் கொடுப்பதால், சிறந்த ஆரோக்கியத்தை தரும் உடற்பயிற்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. உட்கார்ந்த வாழ்க்கை முறை பல்வேறு நோய் பாதிப்புக்கு மூல காரணமாக விளங்குகிறது. உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளாதவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய பாதிப்பு, புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய் பாதிப்பு அபாயம் அதிகரிக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில், தினமும் 4,000 அடிகள் நடப்பவர்கள் மரணம் முதல் இதய நோய் பாதிப்பு வரை தள்ளி போடலாம் என போலந்து மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. போலந்தில் உள்ள லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் சுமார் 2,27,000 பேரின் தரவுகளை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: அதிக தூரம் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. ஒருவர் இவ்வளவு தூரம்தான் நடக்க வேண்டுமென்பதற்கு உச்சபட்ச அளவீடுகள் இல்லை.இருப்பினும், இது உங்கள் உடல் திறன் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.

இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தினமும் 2,337 அடிகள் நடப்பது. அதாவது 25 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியமானது. இளம் வயதில் ஏற்படும் மரணத்தைத் தடுக்க தினமும் 3,967 அடிகள் நடப்பது, அதாவது 40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது அவசியம். ஒவ்வொரு 1,000 அடிகள் அதிகரிப்பிற்கும் 15 சதவீதம் அளவுக்கு அபாயம் குறைகிறது. 60 வயதிற்கு மேற்பட்டோர் எனில் தினமும் 6,000 முதல் 10,000 அடிகள் நடப்போருக்கு, அதே வயதுடைய நடைபயிற்சி மேற்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் அபாயம் குறைவாக இருக்கும். இது ஆண், பெண் என இருபாலினத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply