• Welcome to TamilsGuide
செய்திகள் 1

13ஆம் திருத்தம் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை

இலங்கை

”வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியைக் கூட உரிய முறையில் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டு தற்போது 13ஆம் திருத்தச் சட்டம் பற்றி தமிழ் அரசியல் வாதிகள் குரல்  கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ” என நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.

அண்மையில் வவுனியா தரணிக்குளத்தில் இடம்பெற்ற நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு நிதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக்  கருத்துத்தெரிவிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்  ”வட மேல் மாகாணசபையில் நான் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளேன். இதன் அடிப்படையில் பார்க்கின்ற போது தமிழ் அரசியல்வாதிகள் காணி பொலிஸ் அதிகாரம் என மக்களுக்கு பிழையான மனோ ரீதியான உற்சாகத்தினை வழங்குகின்றனர்.

மாகாணசபை என்பது விசாலமான அதிகாரங்களை கொண்ட கட்டமைப்பு. வடக்கு கிழக்கு மாhகாணசபையில் 13 திருத்தச்சட்டம் மற்றும் பொலிஸ் காணி அதிகரம் என கூறிக்கொண்டிருப்பதை விடுத்து 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மாகாணசபைக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை எப்படி வெல்லலாம் என சிந்திக்க வேண்டும்.

13ஆவது திருத்தச்சட்டம் ஊடாகவே மத்திய அரசும் மாகாண அரசும் சம்பந்தப்படுகின்றது. பெரு வீதிகள், புகையிரதம், மின்சாரம், இலங்கை போக்குவரத்து சபை, நீதிக்கட்டமைப்பு, தேசிய பாடசாலைகள், தேசிய வைத்தியசாலைகள் தவிர அனைத்தும் மாகாணசபையின் ஊடாக செயற்படுத்தவும் நிறுவனங்களாகும். அவற்றை வெற்றி கொண்டு வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முடியும். 13 ஆவது திருத்த சட்டத்தினால்  கிடைக்காத சின்னச்சின்ன பிரச்சனைகளை விடுத்து கிடைத்ததை வெற்றி கொண்டு செயற்படுத்த பாடுபட வேண்டும்.

13 பற்றி பேசிக்கொண்டு வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதியை கூட உரிய முறையில் செலவு செய்யாமல் திருப்பி அனுப்பும் நிலை காணப்பட்டது.

எனவே கிடைத்த அதிகாரத்தினை பயன்படுத்தி அதனூடாக செய்ய முடிந்தவற்றை செய்ய வேண்டும். அதனைவிடுத்து கிடைக்காததற்காக காத்திருப்பது தேவையற்றது என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கே. கே. மஸ்தான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply