• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இரண்டாவது நாளாகவும் தொடரும் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்

இலங்கை

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்றும் தொடர்வதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMA) தெரிவித்துள்ளது. 

நேற்று தொடங்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு வரை தொடரும் என்று சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டப் பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முறையான பதில் கிடைக்காததாலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகள் மீது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் வலியுறுத்தியது.

இருப்பினும், தொழிற்சங்க வேலைநிறுத்தம் நடைபெற்று வந்தபோதிலும், இன்று ரயில் சேவைகளை வழக்கம் போல் இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.

அதன்படி, இன்று காலை மற்றும் மாலை வேளைகளில் அனைத்து அலுவலகப் பயண ரயில்களும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சரக்கு ரயில், காங்கேசன்துறை – கொழும்பு இடையிலான நகரங்களுக்கிடையிலான (Intercity) ரயில், யாழ் தேவி ரயில் மற்றும் மன்னாரிலிருந்து கொழும்பு வரை செல்லும் ரயில் ஆகியவற்றை இன்று இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு வரை செல்லும் இரவு நேர அஞ்சல் ரயில் ஏற்கனவே தனது பயணத்தைத் தொடங்கிவிட்டதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply