உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு
இலங்கை
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிஹே தெரிவித்துள்ளார். இலங்கைகல்வி
குறிப்பாக, இலகு ரக வாகனங்களின் விலை குறைந்தது 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு தற்போதைய சந்தை நிலைமை சாதகமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், வாகனங்களை முன்பதிவு செய்ய இது ஏற்ற காலமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தை விலைகள் மேலும் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் பெரும்பாலான வர்த்தகர்கள் தற்போது வாகனங்களை நஷ்டத்திற்கே விற்பனை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சந்தை நிலவரத்தைப் பொறுத்து வாகனங்களின் விலை குறையும் போக்கு தொடரக்கூடும் எனத் தெரிவித்த அவர், சந்தை நிலைபெற்ற பின்னர் விலைகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படும் டொயோட்டா யாரிஸ், டொயோட்டா ரைஸ், ஹோண்டா வெசல், சுஸுகி வேகன் ஆர், டைகாட்சு மீரா மற்றும் சுஸுகி வேன் உள்ளிட்ட பல வாகன மொடல்களின் விலைகள் 4 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA) அண்மையில் வெளியிட்ட கருத்துக்களையும் இந்திக சம்பத் மெரெஞ்சிஹே நிராகரித்துள்ளார்.
பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வோர் வரி விதிப்பு நடைமுறையில் காணப்படும் குறைபாட்டை பயன்படுத்தி வருவதால், 2026ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் 100 பில்லியன் முதல் 120 பில்லியன் ரூபாய் வரையிலான வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என CMTA முன்னதாக தெரிவித்திருந்தது. இலங்கைகல்வி
2025ஆம் ஆண்டில் அரசாங்கம் சுமார் 40 பில்லியன் ரூபாய் வருவாயை இழந்துள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் மேலும் 54 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் CMTA தெரிவித்திருந்தது.
எனினும், இந்த வருவாய் இழப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மெரெஞ்சிஹே, அரசாங்க வருவாயில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்புக்கு புத்தம் புதிய வாகனங்களின் இறக்குமதியே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளைச் சுட்டிக்காட்டிய அவர், புத்தம் புதிய வாகனங்களின் இறக்குமதி அரசாங்க வருவாயை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் விளக்கியுள்ளார்.
மேலும், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த ஐந்து ஆண்டு காலக் கட்டுப்பாட்டினால் ஏற்பட்ட வாகனப் பற்றாக்குறை தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சந்தையில் எஞ்சியுள்ள தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இன்னும் அதிகளவிலான வாகனங்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தையின் உண்மையான தேவையை விட அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டமையே தற்போதைய விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்ட மெரெஞ்சிஹே, அரசாங்கம் விதித்துள்ள கூடுதல் கட்டணமும் அண்மைய விலை சரிவுக்கு பங்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.






















