பிலிப்பைன்ஸ் படகு தீ விபத்து - உயிரிழப்பு 35 ஆக உயர்வு
பிலிப்பைன்ஸில் இந்த வாரம் தீப்பிடித்து எரிந்த படகின் சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான கோரோன் நோக்கிப் பயணித்த ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ என்ற படகில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவத்தின்போது படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என 134 பேர் பயணித்துள்ளனர். இதுவரை 43 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நச்சுப் புகை மற்றும் அதிக வெப்பம் காரணமாக நேற்று வரை படகுக்குள் நுழைய முடியாத நிலை காணப்பட்டதாக பிலிப்பைன்ஸ் கடலோரக் பொலிஸ் படை தெரிவித்துள்ளது.
இதனால் மேலும் சில உடல்கள் படகுக்குள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உடல்கள் பயணிகள் உறங்கும் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் படை செய்தித் தொடர்பாளர் கொமடோர் நோயெமி கயாப்யாப் தெரிவித்துள்ளார்.
உயிர் பிழைத்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், சரக்கு வைக்கும் பகுதியில் இருந்தே தீ பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், சில பயணிகள் உயிர்காக்கும் கவசங்களை அணியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படகு விபத்து தொடர்பான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பிலிப்பைன்ஸ் கடல்சார் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





















