பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்...
சினிமா
உடல்நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்.
நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர். இவர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சௌகார் ஜானகி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
94 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் நடிகை சௌகார் ஜானகி இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.
கடந்த 2022-ம் ஆண்டில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது. தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல விருதுகளை சௌகார் ஜானகி பெற்றுள்ளார்.





















