• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கால்டன் இல்லத்தை நாமலின் பெயருக்கு மாற்றிய மகிந்த

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் தனது பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிலர் 'ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள்' என்கின்றனர் எனவும் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.

வலைதள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

நேர்த்தியான சொத்து விபரங்கள்

மேலும் கருத்து வெளியிட்ட அவர், ''நான் நாடாளுமன்றுக்கு வருகை தந்த காலத்தில் இருந்து இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளேன்.

அதாவது புதிய சட்டங்கள் வருவதற்கு முன்பே இவற்றை சமர்ப்பித்துள்ளேன். எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.

நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை. எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன. அதேபோல் நான் ஒரு காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன்.

அதைத் தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

மேலும் அது குறித்து இப்போது இரண்டு அரசாங்கங்களால் சுமார் 7 முதல் 10 வருடங்களாக அதாவது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் என 2015 முதல் 2020 வரை.

மீண்டும் 2025 முதல் இன்று வரையிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. எனவே அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன். மேலும் அந்த வருமானம் கிடைத்த விதம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளேன்.

அத்தோடு நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன். மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து அவருக்குக் கிடைத்தவை.

மேலும் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார்கள். இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும்.

ஏனென்றால் அப்பா அதை எனக்குக் கொடுத்து விட்டார் கடந்த வாரமே எழுதப்பட்டது. அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம் அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன்.

ஏனென்றால் ஆயுட்கால உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும் ஒருவன் நான்" என கூறியுள்ளார்.
 

Leave a Reply