• Welcome to TamilsGuide
செய்திகள் 1

AI குறித்த கமல் ஹாசனின் எச்சரிக்கை - ஆதரவு தெரிவித்த ஸ்ருதி ஹாசன்

சினிமா

செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் மிதமிஞ்சிய பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் விடுத்த எச்சரிக்கையை அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் முழுமையாக ஆதரித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், சாட்ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதில் மாணவர்கள் காட்டும் அதிகப்படியான ஆர்வத்தைக் குறித்து எச்சரித்தார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு: ஏஐ தளங்களில் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பின்னால் பெரும் அளவிலான மின்சாரமும், கணினிகளை குளிர்விக்க அதிகப்படியான தண்ணீரும் வீணாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

"சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும், ஒரு டம்ளர் தண்ணீரை நுகர்வதற்குச் சமம்" என்று அதன் சுற்றுச்சூழல் தாக்கத்தை எளிய உதாரணத்துடன் விளக்கினார்.

"தேவையான கேள்விகளை மட்டும் ஏஐ-யிடம் கேளுங்கள். மற்றபடி, உங்களுக்கு அருகில் இருக்கும் நண்பர்களிடம் பேசி விடை தேடுங்கள். அந்தத் தொழில்நுட்பத்தை விட அதிகமாகத் தெரிந்த மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்," என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

கமல்ஹாசனின் இந்த உரையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்ருதி ஹாசன், அதற்கு "100"எமோஜியைப் பதிவிட்டு தனது முழு உடன்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தும் நீரின் அளவு குறித்த தரவுகளையும், "ஏஐ-யை விட மனிதர்களின் திறமைக்கு இன்னும் மதிப்பு கொடுப்பவராக இருந்தால் பின்தொடருங்கள்" என்ற வாசகத்துடன் கூடிய வீடியோவையும் பகிர்ந்து மனித உழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a Reply