எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கை
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர் (QR) குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விநியோகம்
இது குறித்துதெரிவித்த அவர், நாட்டில் எதிர்காலத்திலும் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனவே, தற்போதைய விநியோக முறைமையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனப் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.
தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை அதிகரிப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
மறு அறிவித்தல் வரை தற்போதைய ஒதுக்கீட்டு எல்லைகளே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என“ அவர் மேலும் தெரிவித்துள்ளார்.























