ஒன்டாரியோ மாகாண முதல்வரின் செல்வாக்கு குறைகின்றதா
கனடா
ஒன்டாரியோ மாகாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் முதலமைச்சர் டக் ஃபோர்டின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
செய்தியாளர்கள் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியபோது, டக் ஃபோர்டு அதனை கடுமையாகச் சாடியுள்ளார்.
எனக்கு என்னைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்வதில் விருப்பமில்லை. ஆனால், இன்று தேர்தல் நடத்தப்பட்டாலும் 41 சதவீத ஆதரவுடன் நாங்கள் மீண்டும் ஒரு மிகப்பெரிய பெரும்பான்மை ஆட்சியை அமைப்போம். எங்களது கட்சியின் உள்வட்டாரக் கருத்துக்கணிப்புகளும், பிற நிறுவனங்களின் முடிவுகளும் முற்றிலும் சாதகமான வேறொரு கதையைத் தான் காட்டுகின்றன.
மேலும், பொதுவெளியில் வெளியான இந்த முடிவுகளை விமர்சித்த அவர், அவர்கள் இந்த போலி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரான என்.டி.பி மற்றும் லிபரல் கட்சியின் ஆதரவாளர்களிடம் மட்டுமே அவர்கள் கருத்து கேட்டுள்ளனர்.
டவுன்டவுன் பகுதியில் உள்ள தீவிர என்.டி.பி ஆதரவு வட்டாரங்களில் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாகாணத்திலும் இது நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இத்தகைய சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை ஊடகங்களாகிய நீங்களும் பெரிதுபடுத்துகிறீர்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.






















