டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்
இலங்கை
டுபாய் அரசாங்கத்தினால் அதிரடியாக கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு, நேற்று (22) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 21 சந்தேகநபர்கள் குறித்துப் பல அதிர்ச்சி தரும் தகவல்களைப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில், இலங்கை பொலிஸாரால் சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘மஹவத்தே சாமர’ மற்றும் ‘வனாத்தே குடு துமிந்த’ ஆகியோரும் அடங்குவர்.
அத்துடன் இவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றன.
இவர்கள் இருவரும் டுபாயில் நடைபெற்ற ஆடம்பர விருந்து ஒன்றின் போதே அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ‘குடு துமிந்த’ என்பவர், கடந்த 2025ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி பொரளையில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றும் மேலும் மூவர் படுகாயமடைந்த பயங்கரவாதப் பாணியிலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வெளிநாட்டிலிருந்தபடி வழிநடத்திய முக்கிய சூத்திரதாரி எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இவர் மேலதிக தீவிர விசாரணைகளுக்காகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும், நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட குழுவில் இவரின் நெருங்கிய சகாக்கள் ஐவரும் அடங்கியுள்ளனர்.
அதேநேரம், மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ‘மஹவத்தே சாமர’ மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களைத் தவிர, எஞ்சிய சந்தேகநபர்களில் பெரும்பான்மையானோர் டுபாயில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் விசித்திரமானது எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஈரான் நாடு டுபாய் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலை இந்த நபர்கள் தங்களது கைபேசிகளில் காணொளி (Video) பதிவு செய்து, அதனைச் சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர்.
டுபாயின் பாதுகாப்பு விதிகளை மீறிய காரணத்தினாலேயே இவர்கள் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு விதிகளின்படி, கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களிடம் இருந்த பணம், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் டுபாய் பாதுகாப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுடன் வெறும் கடவுச்சீட்டை மட்டும் கையில் கொடுத்து விமானம் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.
நாடுகடத்தப்பட்ட இந்த 21 பேரில் உள்ளடங்கும் இரண்டு பெண்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள அந்தந்த பொலிஸ் நிலையங்களில், மேலதிக விசாரணைகளுக்காக இன்று (23) பிற்பகல் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.























