இதுவே கடைசிச் சந்தர்ப்பம் - தையிட்டி காணி உரிமையாளர்களுக்குச் சக உரிமையாளர் விடுத்த உருக்கமான வேண்டுகோள்
இலங்கை
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் காணிகளை உடையவர்கள், உடனடியாகத் தமது ஆவணங்களுடன் முன்வந்து நிலங்களை உறுதிப்படுத்துமாறு காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி விவகாரம் தொடர்பாக யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
கடற்தொழில் அமைச்சர், மாவட்ட செயலர் மற்றும் நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் காணி விடுவிப்புத் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.
இதன்போது ஊடக சந்திப்பில் சாருஜன் சுகுமாரி என்பவர் , “காணிகளை அளவீடு செய்யாமலேயே விடுவிக்குமாறு நாங்கள் கோரினோம் எனவும் ஆனால், காணி உறுதிகளில் உள்ள அளவுகளின் அடிப்படையில் துல்லியமாக அளவீடு செய்த பின்னரே உரியவர்களிடம் கையளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தற்போது 17 பேர் மட்டுமே காணி உறுதிகளைச் சமர்ப்பித்து எமது நிலங்களை மீட்கப் போராடி வருகிறோம். ஆனால், விகாரை அமைந்துள்ள பரப்பிற்குள் இந்த 17 பேரின் காணிகளைத் தவிர இன்னும் சிலரின் காணிகளும் உள்ளதாகத் தெரிகிறது.”
“விகாரை அமைந்திருக்கும் பகுதிக்குள் உங்களுக்குக் காணிகள் இருந்தால், தயவுசெய்து உங்கள் காணி உறுதிகளுடன் முன்வந்து எல்லைகளை அடையாளம் காட்டுங்கள். அவ்வாறு செய்தால் மட்டுமே உங்கள் நிலங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.”
இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவர் எச்சரிக்கையில், “தற்போது அடையாளம் காணப்பட்ட 17 பேருக்கே காணிகளை மீள ஒப்படைக்க முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், மீண்டும் உங்கள் காணிகளைப் பெற இன்னும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராட வேண்டிய நிலை ஏற்படும்” எனத் தெரிவித்தார்.
எதிர்வரும் 17-ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகள் நடைபெறவுள்ள நிலையில், தையிட்டி பகுதியில் காணி உள்ள அனைவரும் உரிய ஆவணங்களுடன் வருகை தந்து தமது உரிமையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.























