நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானம்
இலங்கை
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமையையடுத்து, நாட்டில் யூரியா உரக் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளதால், நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், இந்த வருடத்தின் சிறுபோக செய்கைக்காக நெற்செய்கைக்கு மாத்திரம் கலப்பற்ற யூரியா உரக் கையிருப்புகளை விவசாய சேவை நிலையங்கள் ஊடாக மாத்திரம் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாட்டின் அனைத்து விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அறிவுறுத்துவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, உரம் விநியோகிக்கப்படும் போது ஒவ்வொரு விவசாயியும் பயிரிடும் நிலப்பரப்பிற்கு ஏற்ப தேவையான அளவு உரத்தை மாத்திரம் வழங்குமாறு அனைத்து விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உரங்களை வழங்கும் போது, போகக் கூட்டங்களின் தீர்மானங்களுக்கு அமைய அல்லது நெற்செய்கை முன்னெடுக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், தரவுத் தொகுதியில் தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டுள்ள விவசாயிகளின் விபரங்களின் அடிப்படையில், குறித்த பயிர்ச்செய்கை நிலப்பரப்பைக் கருத்திற்கொண்டு யூரியா உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தற்போதுள்ள உரக் கையிருப்புகளை முகாமைத்துவம் செய்து 2026 சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களம் அனைத்து விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.






















