• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

இலங்கை

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவையை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் பெறாத மாற்றுத்திறனாளிகளின் பயண உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

‘அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் மனித கௌரவத்தை பாதுகாக்கும் நாடு’ என்ற அரசாங்கத்தின் தூரநோக்கை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக இந்த திட்டம் அமையும். மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்தில் பயணிக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்திற்காக மொத்தமாக 430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திட்டத்தின் முதற்கட்டமாக சக்கர நாற்காலி பயன்படுத்தும் பயணிகள் எளிதாக ஏறி இறங்கக்கூடிய வகையில் ‘தாழ்ந்த தளம்’ கொண்ட நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் 10 தொகை கடந்த 10ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை சனிக்கிழமை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசன வசதி 33 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்துகளில் ஒரே நேரத்தில் சுமார் 80 பயணிகள் பயணிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சக்கர நாற்காலி பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப வசதிகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னோடி திட்டமாக இந்த பேருந்துகள் மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை வரையிலான பாதையில் இயக்கப்படவுள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒருமுறை இந்த சேவைகள் செயல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை நேரடியாக இணைக்கும் வகையிலும் இந்த சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன், இந்த சேவையில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்ட 28 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சைகை மொழி, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் பேருந்து தொழில்நுட்பம் தொடர்பான விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முன்னோடி திட்டம் வெற்றிகரமாக அமையுமானால், எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேலும் 100 விசேட பேருந்துகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply