ஈரான் தாக்குதல்... மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் கனேடியர்களின் நிலை என்ன?
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலும், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியும், மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்துவரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
ஈரான் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், துபாயில் வாழும் கனேடிய பெண்ணொருவர் ஒருவர் தான் சந்தித்த திகில் அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
சனிக்கிழமை, காரிலிருந்து இறங்கும்போது, ஒரு வித்தியாசமான காட்சியைக் கண்டதாக தெரிவிக்கும் Graison Foster என்னும் அந்தப் பெண், ஜெட் விமானம் செல்லும்போது ஏற்படும் சத்தம்போல் ஒரு சத்தம் கேட்டதாகவும், அது என்ன என அவர் வியந்துபார்த்துக்கொண்டிருக்கும்போதே அது விழுந்து பயங்கரமாக வெடிக்க திகிலடைந்துள்ளார் அவர். அது ஒரு ஏவுகணை!
அதைத்தொடர்ந்து வரிசையாக ஏவுகணைகள் வரத்துவங்கின என்கிறார் அவர்.
என்றாலும், அவற்றை நடுவழியிலேயே தடுத்து அழித்ததை தாங்கள் கண்டதாகவும், ஆனாலும், கனடாவிலேயே வளர்ந்ததால் தனக்கு இப்படிப்பட்ட அனுபவம் எதுவும் இல்லை என்பதால், அந்த சத்தமும் காட்சிகளும் தன்னை திகிலடையச் செய்ததாகவும் தெரிவிக்கிறார் Graison Foster.
இதே நிலையில்தான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அப்பாவி மக்களுக்கும், அங்கு சுற்றுலா முதலான காரணங்களுக்காக சென்றுள்ள மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் காணப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், கனேடிய வெளியுறவு அமைச்சரான அனிதா ஆனந்த், மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் கனேடியர்களுக்கு சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், அங்கு வாழும் கனேடியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எல்லை பகுதிகளில் வாழும் கனேடியர்கள், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களில் பேரில் கவனமாக நடந்துகொள்ளவேண்டும் என்றும், வெளியேற பாதுகாப்பான சூழல் உருவானால் மட்டுமே வெளியேறவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் அவர்.
























