எச்1பி விசாவில் மோசடி - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு
மோசடி புகாரை தொடர்ந்து, 'எச்1பி' விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது.
அதில், 75 சதவீத விசாக்கள் இந்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன. இது, அமெரிக்கர்களின் வேலையை பறிப்பதாகக் கூறி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
எச்1பி விசா திட்டத்தில் முறைகேடு நடப்பதாக அமெரிக்க முன்னாள் எம்.பி.,யும், பொருளாதார நிபுணருமான டேவ் பிராட் என்பவர் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.
'' அமெரிக்காவில் பணிபுரிய சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் மூலம் 2 இலட்சத்து 20,000 விசாக்கள் வழங்கப்பட்டு உள்ளது'' என்றும் புகார் கூறியிருந்தார்.
தற்போது எச்1 விசா மோசடி புகாரை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எச்1 பி விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை அதிகம் சோதனை செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சுயவிவரங்களை ஸ்கேன் செய்யவும் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
























