மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்த பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளைஞர்கள்
இலங்கை
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயல் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விதமான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் (2) காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக,மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துமன்னார் மாவட்டத்தை சேராத சில இளைஞர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் போராட்டக் காரர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும், இதன்போது சிலர் தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடுத்து நிறுத்தப்பட்ட இளைஞர்களிடம் போராட்டம் தொடர்பில் வினவப்பட்ட நிலையில்,” கும்பல் ஒன்று கூட்டம் ஒன்றை நடத்துவதற்காக தம்மை மல்லாவியில் இருந்து அழைத்து வந்ததாகவும், பணம்,உணவு மற்றும் ஏனைய செலவுகள் தாங்கள் பார்த்துக் கொள்வதாக தெரிவித்து போராட்ட களத்தில் எம்மை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றுவரும் காற்றாலை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட காற்றாலை நிறுவனம் பல்வேறு முயற்சிகள் எடுத்துவருவதாகவும் ,தாங்களாகவே கிராமங்களில் உள்ள இளைஞர் கழகங்களிடம் உதவி செய்வதாக கூறி கோரிக்கை கடிதங்களை பெற்று அவற்றை காற்றாலைக்கு ஆதரவு கடிதங்களை போல் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் உள்ளூர் இளைஞர் கழகங்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





















