• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ்த்திரை உலகில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடப்பதுண்டு. 

தமிழ்த்திரை உலகில் அவ்வப்போது சில அதிசயங்கள் நடப்பதுண்டு. படப்பிடிப்பின் போது இக்கட்டான சூழ்நிலைகள் வருவதால் கூட இது நடக்கலாம். சில படங்கள் திட்டமிட்டபடி சாதனைக்காகவே எடுக்கப்படும். சுயம்வரம் என்ற படம் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு சாதனை படைத்தது. அதே போல அரை மணி நேரத்தில் உருவான பாடலைப் பற்றித் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய படம் புதிய வார்ப்புகள். இந்தப் படத்தில் அரை மணி நேரத்தில் ஒரு பாடல் உருவாகியுள்ளது. எப்படி என்று பார்ப்போமா…

புதிய வார்ப்புகள் படத்தில் பாக்கியராஜ், ரதி இணைந்து நடித்து இருந்தனர். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே பிரமாதம். இந்தப் படத்திற்காக முதலில் இதயம் போகுதே என்ற பாடல் தான் ரெக்கார்டிங் முடிந்து ரெடியாக இருந்தது.

அப்போது தான் பாரதிராஜாவுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியதாம். முதல் பாடலே டூயட்டாக இருந்தால் நல்லா இருக்குமே என்று. அதனால் இரவு 10 மணிக்கு இளையராஜாவுக்கு போன் போட்டுள்ளார். இதுபற்றி பேசினாராம். பாட்டெழுத கண்ணதாசனை அழைத்து வருவது என் பொறுப்பு. நீங்க டியூன் மட்டும் போட்டு ரெடியா இருங்கன்னு சொல்லிருக்காரு.

உடனே இளையராஜாவும் டியூனோடு ரெடியாக இருக்க, கண்ணதாசன் மறுநாள் காலை அங்கு வருகிறார். டியூனுக்கு ஏற்ப அந்த இடத்தில் இருந்தபடியே ‘வான் மேகங்களே’ பாடலுக்கான வரிகளை எழுதிக்கொடுத்தார். அந்தப் பாடல் ரெக்கார்டிங்கும் உடனே முடிந்தது. இந்தப் பாடல் அரை மணி நேரத்திலேயே உருவானது தான் அதிசயம். மலேசியா வாசுதேவனும், ஜானகியும் இணைந்து பாடி அசத்திய பாடல் இது. அப்போது வானொலிகளில் இந்தப் பாடல் ஒலிக்காத நாள்களே இல்லை எனலாம்.
 

Leave a Reply