• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இது என்ன டியூன்?.. இதில் நான் பாடவோ, ஆடவோ என்ன இருக்கு?

சினிமா

தமிழ் சினிமாவில் 60களில் நடிகர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என ரவுண்டு கட்டி அடித்தவர் சந்திரபாபு. 50களின் இறுதியில் சினிமாவில் நுழைந்து காமெடி நடிகராக வளர்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல், அவர் நடிக்கும் படங்களிலெல்லம ஒரு பாடலையும் பாடி நடித்திருக்கிறார்.

அப்படி அவர் பாடி நடித்த எல்லா பாடல்களுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, குங்குமப்பூவே கொஞ்சுப்புறாவே என பல பாடல்களை சொல்லலாம். அந்த பாடலுக்கு அசத்தலாக நடனமாடி ரசிகர்களையும் கவர்ந்துவிடுவார்.

நாகேஷுக்கு முன் முன்னணி காமெடி நடிகராக இருந்தார் சந்திரபாபு. சினிமாவில் இந்த இடத்தை அடைவதற்கு முன் அவர் பல அவமானங்களையும் சந்தித்திருக்கிறார். துவக்கத்தில் சினிமாவில் ஏதோ ஒன்றில் நுழைய ஆசைப்பட்ட சந்திரபாபு பாடகராக வேண்டும் என நினைத்து இசையமைப்பாளர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டார். ஆனால், கிடைக்கவில்லை. 

ஒருமுறை அப்போது பிரபலமாக இருந்த இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவை சந்தித்து பாட வாய்ப்பு கேட்டார் சந்திரபாபு. அப்போது அங்கு உதவியாளராக இருந்தவர் எம்.எஸ்.வி. அவரிடம் சந்திரபாபுவை அவரை அனுப்பி எப்படி பாடுகிறார் என சோதிக்க சொன்னார் சுப்பையா.

சந்திரபாபு பாடுவதை கேட்ட எம்.எஸ்.வி. ‘இவர் எங்கே பாடுகிறார். வரிகளை அப்படியே பேசுகிறார். அதில் தமிழும் இல்லை’ என சொன்னார். எனவே, ‘மறுபடியும் பயிற்சி எடுத்துவிட்டு வா தம்பி’ என சந்திரபாபுவை அனுப்பிவிட்டார் சுப்பையா. போகும்போது எம்.எஸ்.விஸ்வநாதனை முறைத்துக்கொண்டே சென்றார் சந்திரபாபு.

காலங்கள் ஓடியது. சந்திரபாபு சினிமாவில் நடிக்க துவங்கி பாடல்களையும் பாடி வந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக இசையமைக்க துவங்கி பல படங்களுக்கும் இசையமைத்து வந்தார். ஒருமுறை எம்.எஸ்.வி இசையைக்கும் படத்தில் சந்திரபாபு ஒரு பாடல் பாடுவது என முடிவானது. அவருக்காக ஒரு அருமையான டியூனை போட்டிருந்தார் எம்.எஸ்.வி. 

ரிக்கார்டிங் தியேட்டருக்கு போன சந்திரபாபுவிடம் அந்த டியூனை வாசித்து காட்டினார் எம்.எஸ்.வி. அதைக்கேட்ட சந்திரபாபு ‘இது என்ன டியூன்?.. இதில் நான் பாடவோ, ஆடவோ என்ன இருக்கு?’ என கோபமாக கேட்டார். அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், பழசை மனதில் வைத்தே சந்திரபாபு இப்படி பேசுகிறார் எம்.ஸ்.விக்கு புரிந்துவிட்டது.

எம்.ஸ்.வி கோபப்படவில்லை. தனது இசைக்கலைஞர்களை அந்த பாடலை வாசிக்க சொன்னார். அவர் ஏற்கனவே கொஞ்சம் நடனம் கற்றவர் என்பதால் எழுந்து அந்த பாட்டுக்கு நடனமாடினார். பாடல் முடிந்ததும் ஓடிச்சென்று ‘நீ கலைஞன்டா’ என அவரை கட்டியணைத்த சந்திரபாபு, அவரை அப்படியே தூக்கி சுத்தினார்.

அதன்பின் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் மாறினார். நான் இறந்தால் எனது உடல் விசுவின் வீட்டில் சிறிதுநேரம் வைத்து விட்டு அதன்பின்னரே அடக்கம் செய்ய வேண்டும் என சந்திரபாபு அவரின் குடும்பத்தினருக்கு சொல்லி இருந்தார். அவரின் ஆசைப்படியே அவரின் உடல் எம்.எஸ்.வியின் வீட்டில் வைக்கப்பட்டு பின் அடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply