• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளை சந்திக்கும் எதிர்கட்சி

இலங்கை


சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பு பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்றிட்டப் பிரதானி பீற்றர் ப்ரூவர் தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகைத்தந்துள்ளது.

குறித்த குழு பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினருக்கும், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம் மற்றும் நிபந்தனைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் இந்நிபந்தனைகளின் அமுலாக்கம் என்பவற்றின் விளைவாக நாட்டுமக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி குறித்தும் நாணய நிதிய அதிகாரிகளிடம் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எடுத்துரைக்கவுள்ளனர்.

மேலும், நாணய நிதிய நிபந்தனையின் பிரகாரம் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் கடன்வழங்குனர்களுடன் இன்னமும் இணக்கப்பாடொன்று எட்டப்படாமை பற்றியும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்றிட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்தது.

அதனையடுத்து முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டதுடன், இரண்டாம் கட்டமாக 337 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது.
 

Leave a Reply