காப்பாற்றத்தவறிய கடற்படை? கொலை செய்யப்பட்ட இளைஞன்.. மனைவியின் நிலை என்ன?
சினிமா
பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக நேற்று மாலை கடத்தப்பட்ட தம்பதியரில் கணவன் வாள் வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
காரைநகரில் இருந்து பொன்னாலை ஊடாக வட்டு தென்மேற்கு பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி மனைவியுடன் 24 வயதான தவச்செல்வம் பவித்திரன் மோட்டார் வாகனத்தில் பயணித்துள்ளார்.
இதன்போது, குறித்த தம்பதியினரை வாளுடன் காரில் காரைநகர் நோக்கி பயணித்தவர்கள் அச்சுறுத்திய நிலையில் குறித்த இளைஞன் தனது மனைவியுடன் கடற்படை முகாமினுள் சென்று அடைக்கலம் கோரியுள்ளார்.
இந்நிலையில் கடற்படையினர் எமக்கு பிரச்சினை வரும் வெளியேறுமாறு கூறி தம்பதியினரை வௌியேற்றியுள்ளனர்.
இந்நிலையில் கடற்படை முகாம் முன்னே இளைஞனை ஒரு காரிலும் மனைவியை மற்றுமொரு காரிலும் குறித்த வன்முறைக் கும்பல் கடத்தி சென்ற நிலையில் இளைஞன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வட்டுக்கோட்டை ஆதார வைத்தியசாலையின் முன்னால் இறக்கிவிடப்பட்டுள்ளார்.
வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த நபரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளான்.
இதேவேளை, மனைவி அராலியிலுள்ள வீடொன்றில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அயலவர்கள் முரண்பட்டமையினால் வன்முறைக் கும்பல் சித்தன்கேணி பகுதியில் குறித்த பெண்ணை இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தொடர்ந்து உயிரிழந்த நபரின் மனைவியால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் பொலிசார் சந்தேகநபர்களில் மூவரை அடையாளம் கண்டுள்ளனர்.
இதேவேளை, வட்டு பொலிஸ் நிலையத்திற்கு யாழ். மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் விரைந்துள்ள நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் இணைந்து மேலதிக விசாரணைகள் ஆரப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவம் ஒன்றுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.