• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்களால் கனவுக் கன்னியாக மாறிய நாயகி - மோகினி..!

சினிமா

தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வந்த எத்தனையோ கனவுக் கன்னிகள் தற்போது குடும்ப பெண்மணியாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அப்படி 90களில் இளைஞர்களைத் தனது கண்களால் வசீகரம் செய்து வைத்திருந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மோகினி.

90களில் திரையரங்குகளை கடந்து சென்றவர்களால் நடிகை மோகினியை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பார்ப்போரை வசீகரம் செய்யும் அளவிற்குத் தனது பச்சை நிற விழிகளால் அனைத்து இளைஞர்களையும் தன் வசம் வைத்திருந்தார்.

1976 ஆம் ஆண்டு தமிழ் குடும்பத்தில் பிறந்த மகாலட்சுமி தான் இந்த மோகினி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிரான்சிஸ் ஆங்கிலோ இந்திய பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பை முடித்தார். ஈரமான ரோஜாவே இந்த திரைப்படத்தின் மூலம் மோகினியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். புதிய மன்னர்கள், நான் பேச நினைப்பதெல்லாம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து மிகப்பெரிய நாயகியாக வலம் வந்தார்.

முதல் படமான ஈரமான ரோஜாவே திரைப்படத்தில் நடித்த பிறகு 1991 ஆம் ஆண்டு அக்ஷய்குமாருடன் டான்சர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்குப் பாலிவுட்டில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்தியா முழுக்க வலம் வந்தார்.

சினிமா மட்டுமின்றி டிவி சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு டிவி தொடர்களில் நடித்துள்ளார். பெண்களை மையமாக வைத்து எடுக்கக்கூடிய கதையில் இவருக்கு ஆர்வம் அதிகம்.

மோகினியின் கண்களுக்காகவே இவர் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார். ஒரு வருடத்தில் ஐந்து மொழிகளில் நடித்திருக்கிறார். இந்தி தவிர மற்ற நான்கு மொழி படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது.

பரதநாட்டியம் கற்றுக்கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர். நாட்டுப்புற நடனம் வராது என்று கூறியும் இயக்குநர் விக்ரமன் இவரை நீ கட்டும் சேலை மடிப்புல பாடலுக்கு இவரைக் கிராமத்து நடனம் ஆட வைத்தார்.

அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தனக்கு போலீஸ் வேடத்தில் நடிக்க ஆசை என்றும், அப்படி ஒரு வாய்ப்பு இன்றுவரை அமையவில்லை, வாய்ப்பு கிடைத்தால் கட்டாயமாக நடிப்பேன் என்று நடிகை மோகினி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பின்னர் நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் பரத் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது கிறிஸ்தவ மதத்திற்கு முழுமையாக மாறிய நடிகை மோகினி அமெரிக்காவில் கிறிஸ்தவ மத போதகராக இருந்து வருகிறார்.
 

Leave a Reply