• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சினிமா நடிகர், நடிகைகளை நேரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வப்படுவர்

சினிமா

சினிமா நடிகர், நடிகைகளை நேரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வப்படுவர். பார்த்துவிட்டால் ரொம்பவே கொண்டாடுவர். சின்ன வயதிலேயே பணத்தையும், புகழையும் சேர்த்துவிடுவதால் அவர்களுக்கு எல்லாம் கிடைத்துவிடும். ஆனால் அவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதி போய்விடும். தனிமை அவர்களை ரொம்பவே வாட்டி எடுக்கும். அதிலும் சினிமா வாய்ப்பு குறைந்து போனால் அவர்கள் வாழ்க்கையை அவர்களால் ஜீரணிக்கவே முடியாது.

யார் ஏமாற்றுகிறார்கள், யார் ஏமாற்றவில்லை என்பதே தெரியாமல் போய்விடுகிறார்கள். அதனால் தான் தற்கொலை முடிவுக்கே செல்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் நடிகை விஜி. 

1982ல் கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான படம் தான் கோழி கூவுது. இதுல பிரபு, சுரேஷ், சில்க்னு நிறைய பேர் நடிச்சிருப்பாங்க. சுரேஷூவுக்கு ஜோடியாக நடித்தவர் விஜி.

படம் மட்டுமல்ல. பாடல்களும் சூப்பர்ஹிட். அதிலும் ஏதோ மோகம் பாடல் இன்றும் மறக்க முடியாது. இந்தப் படத்திற்குப் பிறகு புகழின் உச்சிக்குப் போனார். அதன்பிறகு சாட்சி மாதிரியான சில படங்களில் நடித்தார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிக்குத் தங்கையாக நடித்தார். 

அதன்பிறகு கதாநாயகி வாய்ப்பு குறைய ஆரம்பித்தது. அதன்பிறகு மற்ற படங்களில் சாதாரண வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதை எல்லாம் மறுத்துவிடுகிறார். அதன்பிறகு மனசைத் தேற்றிக் கொண்டு ஒன்றிரண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சரத்குமார் நடித்த சூரியன் படத்தில் லாலாக்கு டோல் டப்பி மா பாடலில் பிரபுதேவாவுடன் குத்தாட்டம் போடுவார் விஜி.

பூவே உனக்காக படத்தில் மச்சினிச்சி வர்ற நேரம் பாடலில் முரளியுடன் ஒரு குத்தாட்டம் போட்டு இருந்தார். இந்தப் பாடலில் ஆடும்போதே முதுகில் விஜிக்கு வலி வந்து விடுகிறது. அதன்பிறகு சிகிச்சைக்குச் செல்கிறார். அறுவைசிகிச்சையில் தவறு நடந்துவிட கால் பாதிக்கப்பட்டு செயல் இழக்கிறது. அந்தத் தனியார் மருத்துவமனை மீது வழக்குத் தொடர அதில் விஜிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வருகிறது. அதனால் தனியார் மருத்துவமனையும் அதற்கு நஷ்ட ஈடு கொடுக்கிறது.

அதன்பிறகு வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டு கால் சரியாகிறது. ஆனால் அவருக்கு வயது போய்விடுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் அவருக்கு உதவி செய்கிறார். சிம்மாசனம் படத்தில் ஒரு ரோல் கொடுக்கிறார். அதன்பிறகு வாஞ்சிநாதன் படத்திலும் ரோல் கொடுக்க நினைக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தன்னோட வீட்டில் 2000ல் தற்கொலை செய்து கொள்கிறார்.

16 வயதில் ஆரம்பித்த வாழ்க்கையை 34 வயதில் முடித்துக் கொள்கிறார். ஒரு சினிமா இயக்குனரைக் காதலித்ததாகவும், அவர் அதற்கு மறுத்ததும் தான் காரணம். முதலில் இயக்குனர் தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்பதை சொல்லாமல் மறைத்துவிட்டாராம். அதே நேரம் அவரும் காதலித்துள்ளார்.

ஏற்கனவே சினிமா வாய்ப்பு இல்லாமல் நொந்து போயிருந்த விஜிக்கு வாழ்க்கையிலும் ஏமாற்றம் என்றதும் தற்கொலை செய்து கொண்டாராம். விஜியின் அப்பா அஸ்வத். அவர் தன் மகளின் அழகைக் கண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொடுத்தாராம்.

ஒரு கட்டத்தில் விஜி தற்கொலை செய்து கொண்டதும், தன் மகளின் சாவுக்கு தானே காரணமாகி விட்டோமோ என வருந்தி இருக்கிறார். ஒருமுறை திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது அங்கு ஒரு இடத்தைப் பார்த்து ஒரு கல்யாண மண்டபம் கட்டி இருக்கிறார். அதற்கு விஜி கல்யாண மண்டபம் என்று பெயர் வைத்து ஏழைகளுக்கு இலவசமாகப் பயன்படுத்த அனுமதித்தாராம்.

ஆனால் அவரோ அங்கு ஒரு இருட்டறையில் சின்ன அடுப்பு வைத்து அதில் உப்பு இல்லாமல் கஞ்சி காய்ச்சிக் குடித்தே உயிர் வாழ்ந்தாராம். தன் மகளின் சாவுக்குக் காரணமாக இருந்ததற்கு தானே தனக்குத் தண்டனை கொடுக்கிறேன் என்றும் சொன்னாராம். ஒரு கட்டத்தில் அவரும் இறந்துவிட கல்யாண மண்டபம் கவனிப்பாரின்றி கிடக்கிறது. இது போன்ற ஒரு துயரம் வேறு எந்த நடிகைக்கும் வரவே கூடாது என்கிறார் பிரபல யூடியூபரும் திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி.
 

Leave a Reply