• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோட்டாபயவின் சதி நூல் – உண்மையை திரிபு படுத்த வேண்டாமென மனோ காட்டம்

இலங்கை

‘சிங்கள பௌத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிக்கும் என்பதனாலேயே தனக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்று திரண்டு அரகலவை நடத்தினார்கள்’ என கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தகத்தில் கூறியிருப்பதானது, வரலாற்று குற்றங்களில் இருந்து இன்னமும் கூட பாடம் படிக்காத ஒரு அறிவிலி என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எழுதியுள்ள “சதி” என்ற நூல் தொடர்பில் தனது எக்ஸ் தளத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தள்ளதாவது,

சிங்கள-பௌத்தர் பலமடைவது இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. சிங்கள மொழி பேசுவதன் மூலமும், பௌத்த தரிசனத்தை கடை பிடிப்பதன் மூலமும் நானும்கூட சிங்கள பௌத்த சிந்தனையை பலப்படுத்தி வருகிறேனே! எமக்கு அதில் என்ன பிரச்சினை?

இந்நாட்டில் சிங்கள- பௌத்தம், பேரினவாதமாக மாறி, பல இனங்கள், பல மதங்கள், பல மொழிகள் என்ற இலங்கை பன்மைத்துவத்தை இல்லாது ஒழிப்பதே எமது பிரச்சினை. அதுதான் எமது நீண்டகால போராட்டம். உங்கள் “அரகலய” வுக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது.

நாடு முழுவதும்; நடைபெற்ற அரகலவில் பங்கு பெற்ற மக்களில் நூற்றுக்கு 99 வீதமானவர்கள் 2019, 2020 தேர்தல்களில் மொட்டு சின்னத்துக்கு வாக்கு அளித்தவர்கள். அவர்களே, கோட்டாபயவின் முட்டாள்தனமான, பொருளாதார கொள்கைள் காரணமாக வயிற்றில் பாரிய அடி விழுந்தவுடன் தெருவுக்கு வந்து போராடியவர்கள்.

தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கூட இவை பிரச்சினைகள்தான். ஆனால், அவற்றையும் மீறிய இன, மத ஒடுக்குமுறைகளால் அவர்கள் துன்பம் அடைந்தார்கள்.

ஆங்காங்கே ஒரு சில தமிழ், முஸ்லிம் மக்கள் இறுதி கால கட்டங்களில் அரகலவில் கலந்து கொண்டார்கள். சில அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் அதீத கற்பனையில் “இத்தோடு இந்நாட்டில் இனவாதத்தையும் ஒழித்து விடுவோம்” என முழங்கியதும் உண்மைதான். “நல்லது நடந்தால் சரி” என நாம் அவர்களை வாழ்த்தியதும் உண்மைதான்.

இன்று அரசியல் அரங்கில் அந்த அதிக பிரசங்கி தமிழ், முஸ்லிம் இளைஞர்களை காணவில்லை.

எது எப்படி இருந்தாலும், அரகலய முழுக்க முழுக்க, “வயிற்றில் பாரிய அடி விழுந்ததுடன், தெருவுக்கு வந்த சிங்கள பெருந்திரள் மக்களால்” நடத்தப்பட்ட ஒன்றாகும். அதுவும் 2019, 2020 தேர்தல்களில் மொட்டு சின்னத்துக்கு வாக்களித்த மக்களால் நடத்தப்பட்டது. இதுதான் உண்மை.

சிங்கள-பௌத்தர் பலமடைவது சிறுபான்மையினருக்கு பிடிக்காததாலேயே, அவர்கள் அரகலவை நடத்தினார்கள் எனக் கூறி, உண்மையை திரிபு படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷவுக்கு கடுமையாக கூறி வைக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
 

Leave a Reply