• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு குடிநீர் வழங்க மறுத்த பொலிசார்

இலங்கை

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு குடிநீர் வழங்க மறுத்த பொலிசார் - பல மணி நேர போராட்டத்தின் பின் கொண்டு செல்லப்பட்ட உழவு இயந்திரம் விபத்து-எம்.பி உள்ளிட்ட மூவர் காயம் 

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிசார் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு பொலிசாருக்கும், பக்தர்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் சிவராத்திரி வழிபாடுகள் காலை முதல் இடம்பெற்று வந்திருந்தது. இதன்போது காலை முதல் வீதி தடைகளைப் போட்டிருந்த பொலிசார் ஆலய வளாகத்திற்குள் குடி நீர் எடுத்துச் செல்ல இடையூறை ஏற்படுத்தியிருந்தனர்.

ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட குடி நீர் தாங்கி பொலிசாரால் 3 கிலோமீற்றருக்கு முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து குடிநீர் இன்றி அவதிப்பட்ட சிறுவர்கள், பக்தர்களுக்காக அருகில் உள்ள ஆற்றில் இருந்து நீர் பெற்ற போதும் அதனையும் பொலிசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் குடி நீர் இன்றி மக்கள் அவதிப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், மற்றும் ஆலய பக்தர்கள் குடிநீர் தாக்கியுடன் வந்த உழவு இயந்திரத்தை ஆலயத்திற்குள் விடுமாறு பொலிசாருடன் தர்க்கத்தல் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் குடிநீரை விடுமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மாலை மூன்று மணியளவில் குடிநீரை வழங்க பொலிசார் இணங்கினர்.

இதன்போது குடிநீருடன் உழவு இயந்திரம் வருகை தந்த போது குறித்த வாகனம் காட்டுப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான போது அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் நெடுங்கேணி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரையும் பொலிசார் மாலை ஆறு மணியளவில் குடிநீர் தாங்கியை திறந்து வெளியேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply