• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் - இலங்கை தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல் 

கனடா

கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் புதன்கிழமை இரவு நடந்த பயங்கர சம்பவத்தில் தர்ஷனி டிலந்திகா ஏகநாயக(Darshani Ekanyake) (35) மற்றும் இவரது நான்கு பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்கிரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தர்ஷினியின் கணவரான தனுஷ்க விக்கிரமசிங்க(Dhanushka Wickramasinghe) பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சிகிச்சைக்கு பின்னர் சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் தங்கியிருந்த அமரகூன்முபியயான்சேல ஜீ காமினி அமரகோன் (40) என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 19 வயதான ஃபெப்ரியோ டி ஸோய்சா என்ற இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கல்வி கற்பதற்காக கனடாவுக்கு வந்துள்ள நிலையில்,குறித்த குடும்பத்தினருடன் வாழ்வதற்கு முன்னர் வேறொரு இலங்கைக் குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.

வீடியோ கேம்களுக்கு அதிக அடிமையாக இருந்த சந்தேகநபர் மிகவும் வன்முறையாக நடந்து கொண்ட காரணத்தினால், குடியிருப்பாளர்களின் வேண்டுகோளின்படி அவர் வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்த நிலையில், தனுஷ்க விக்கிரமசிங்க அவருக்கு இடமளித்துள்ளார்.

இந்நிலையில், வெளிநாட்டில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டொரண்டோவில்(Toronto) உள்ள இலங்கை துணைத் தூதரகம்(Consulate General of Sri Lanka) அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுடன் வெளிப்படையான தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
 

Leave a Reply