• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தத்தளித்த தமிழ்த் திரையுலகைக் காத்த கேப்டன் விஜயகாந்த்

சினிமா

நடக்குறதுக்குப் பாதையில்லைன்னு ஒரே இடத்துல நிக்கக் கூடாது. நாமதான் நடந்து நடந்து பாதையை உருவாக்கணும்னு பேசிய விஜயகாந்த், அதுபோலவே தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர் தான் விஜயகாந்த்.

மதுரையில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு ரஜினி உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் வந்தார்கள். அப்போது ரஜினிக்குப் பாதுகாவலராகச் சென்ற விஜயராஜ் பின்னாளில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்குப் போட்டியாகப் படங்கள் கொடுக்கும் விஜயகாந்தாக மாறியது வரலாறு. தமிழ்த் திரையுலகத்தினர் மறக்க முடியாத பெயர் விஜயகாந்த்.

தமிழ் சினிமாவில் கதாநாயக பிம்பத்தை உடைத்த வெகு சில நடிகர்களில் விஜயகாந்த் மிக முக்கியமானவர். 1979ஆம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் விஜயகாந்த். ஆரம்ப காலங்களில் திரையுலகில் நிலைக்க மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். கடன் தொல்லையால் அவதி, சரியான வாய்ப்புகளும் அமையவில்லை. ‘தூரத்து இடிழுழக்கம்’ அவருக்கு ஓரளவு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இந்தத் திரைப்படம் இந்தியன் பனோரமாவில் (சர்வதேச திரைப்பட விழா) திரையிடப்பட்டது.

1981ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ விஜயகாந்தின் திரைப் பயணத்தை மாற்றியது. விஜயகாந்த் தயாரிப்பாளர்களின் கவனத்தைப் பெறத் தொடங்கினார். வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வதில் விஜயகாந்த் தனி ரகம், ‘சிவப்பு மல்லி’ என்னும் கம்யூனிச சித்தாந்தத்தைப் பேசும் படத்தில் நடித்தார்.

ரத்தம் இங்கே வேர்வையாகச் சொட்டிவிட்டது, உயிர் வற்றிவிட்டது. காலம் இங்கே ஊமைக் கையை கட்டிவிட்டது, கண்ணீர் சுட்டுவிட்டது என விஜயகாந்த் கண்கள் சிவக்கப் பாடியது சிலிர்ப்பை ஏற்படுத்தாமல் இல்லை.

‘அலை ஓசை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘போராடடா’ பாடல் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைச் சொல்லியிருக்கும்,

எத்தனையோ ரத்த வரிகளை

எங்கள் முதுகில் தந்தவனே

அத்தனையும் வட்டி முதலுடன்

உங்கள் கரங்களில் தந்திடுவோம் என உரக்கப் பாடி அந்தப் பாடலுக்கு விஜயகாந்த் உயிர் சேர்த்திருப்பார்.

சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்த பலருக்கு வாய்ப்பளித்தவர் விஜயகாந்த். அவர் கதாநாயகனாக உருவெடுக்கத் தொடங்கிய காலம், சில நடிகைகள் அவர் நிறத்தையும் உருவத்தையும் காரணம்காட்டி உடன் நடிக்க மறுத்த கதையெல்லாம் உண்டு. விஜயகாந்த் முன்னணி கதாநாயகனாக மாறிய பின் இது குறித்து சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் கேட்டிருக்கிறார், அப்படியெல்லாம் சொல்வேனா ’விஜி’ என அவர்களும் சமாளித்திருக்கிறார்கள். யார் மீதும் பகையுணர்வற்று தன் திரைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்காக ‘ஊமை விழிகள்’ படத்தில் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடித்துக்கொடுத்தார். அந்தப் படத்தில் நடித்தபோது அவர் டாப் ஹீரோ பட்டியலில் இருந்தார். ஓயாமல் நடித்த விஜயகாந்த் நடிப்பில் 1984ஆம் ஆண்டு மட்டும் 18 படங்கள் வெளியாகின.

சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பவர் விஜயகாந்த். ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு சண்டைக் காட்சியில் நடித்ததைப் பார்த்து அவர் மனைவி பிரேமலதா கதறி அழுதுவிட்டார். அன்றிலிருந்து குடும்பத்தாரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டிச்செல்வதை அவர் தவிர்த்துவிட்டார்.

ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் 100ஆவது படம் சரியாக ஓடவில்லை. ஆனால், விஜயகாந்தின் 100ஆவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மாபெரும் வெற்றிபெற்றது. அதிகமாக காக்கிச் சட்டை அணிந்த கதாநாயகன் என்ற பெருமை விஜயகாந்தையே சேரும். அந்த உடையில் எண்ண முடியாத அளவு நடித்திருக்கிறார். அதில் மணிரத்னம் எழுத்தில் உருவான ‘சத்ரியன்’ திரைப்படம் மிகவும் பிரபலம்.

விஜய்-விஜயகாந்த்:

விஜய் திரையுலகில் திணறிக்கொண்டிருந்த வேளையில், அவருக்காக ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் நடித்துக் கொடுத்தார். அதேபோல் சூர்யாவுக்கு ‘பெரியண்ணா’ கொடுத்தார். பல நடிகர்களை, திரையுலக கலைஞர்களை அறிமுகம் செய்தவர் விஜயகாந்த்.

திரையுலகத்தைச் சேர்ந்த பலருக்கும் உதவிய விஜயகாந்த், நடிகர் சங்கத்தை கடனில் இருந்தும் மீட்டெடுத்தார். ஈழப் பிரச்சினையின்போது அந்த மக்களுக்காக நட்சத்திர கலை விழா நடத்தினார்.

ஈழத் தமிழர்கள் என்றால் விஜயகாந்துக்குத் தனிப் பிரியம் உண்டு. அவர்களோடு பேச ஒருமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜயகாந்த் பங்கேற்றார். அதில் பேசிய பெண்மணி ஒருவர், ”உங்களை எங்கள் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க மற்ற ஹீரோக்கள் மாதிரி ஆங்கிலம் பேசி நடிக்காமல், தமிழிலேயே பேசி நடிக்கிறீர்கள்” என்பார். அதற்கு விஜயகாந்த், சிரித்தபடியே எனக்கு ஆங்கிலம் தெரியாதுமா என்பார்.

தமிழில் பேசி நடிப்பது தமிழ்ப்பற்று அது இது என கதை விடாமல், ஒளிவு மறைவின்றி உண்மையைப் பேசியிருப்பார். நீண்டகாலமாகத் திரைத் துறையில் கோலோச்சிய விஜயகாந்த், அதிரடியாக அரசியலில் களமிறங்கினார்

கருணாநிதி, ஜெயலலிதா என்ற மாபெரும் அரசியல் ஆளுமைகள் இருந்த காலகட்டத்திலேயே அரசியலுக்கு வந்து தனக்கென ஒரு வாக்கு வங்கியையும் பிடித்திருந்தார். விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது அப்போது அதிமுகவில் இருந்த எஸ்.எஸ். சந்திரன், ’என் மாப்ள விஜி மக்களுக்கு நல்லது செய்யணும்னுதான் அரசியலுக்கு வருவான்’ என விஜயகாந்துக்கு ஆதரவாகப் பேசியது குறிப்பிடத்தக்கது.

நடக்குறதுக்குப் பாதையில்லைனு ஒரே இடத்துல நிக்கக் கூடாது. நாமதான் நடந்து நடந்து பாதையை உருவாக்கணும்னு பேசிய விஜயகாந்த், அதுபோலவே தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர் தான் கேப்டன் விஜயகாந்த்.
 

Leave a Reply