• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சில அரசியல்வாதிகளுக்கு ஜீவன் மீது காழ்ப்புணர்ச்சி - பாரத் அருள்சாமி கண்டன அறிக்கை

இலங்கை

ஜீவன் தொண்டமானுக்கு எதிராக நேற்யைதினம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் சபையில் முன்வைத்த கருத்துக்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் பாரத் அருள்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய , ஒரு இளம் அரசியல் தலைவராக மக்களுக்கான அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்து, மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிறைவேற்றி வருவதால், அரசியலில் தாம் காணாமல் போய்விடுவோம் என்ற பீதியிலேயே அவர் மீது சில எதிரணி மலையக அரசியல்வாதிகள் விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இது காழ்ப்புணர்ச்சி – வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

வீட்டுரிமையையும், காணி உரிமையையும் வைத்து இதுவரை அரசியல் நடத்தி வந்தவர்கள், இவ்விரண்டு உரிமைகளையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுக்கொடுத்துவிட்டால், தாம் அரசியலில் அநாதையாகிவிடுவோம் என்ற அச்சம் அவர்களை ஆட்கொள்ள தொடங்கியுள்ளது. அதனால்தான் புலம்ப ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்குவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது, ஆக 7 பேர்ச்சஸா அல்லது 10 பேர்ச்சஸா என கோமாளி அரசியல்வாதிகள் குழப்பமடைய தேவையில்லை.

அதேபோல அவர்களின் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்டதுபோல் காட்போல் உரித்து அல்ல, சட்டப்பூர்வமான காணி உரித்து பத்திரமே வழங்கப்படவுள்ளது எனவும் பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

“ விசேட அமைச்சரவை அனுமதியுடன் 10 பேர்ச்சஸ் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, 10 பேர்ச்சஸ் காணியுடன்தான் எமது மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும். பயனாளிகள் தேர்வும் முறையாகவே இடம்பெறும். இதனை இந்தியாவும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் மேற்பார்வை செய்யும்.

இதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அல்ல, தோட்டத்தில் பிறந்திருந்தாலேயே வீடுதான். தோட்டத்தில் 5 வருடங்கள் வாழ்ந்திருந்தால் வீட்டை பெறுவதற்கு அவர் தகுதியுடையவராவார்.

கடந்த ஆட்சியின்போதே கட்சி பார்த்து வீடுகள் வழங்கப்பட்டன. இதன்போது புறக்கணிக்கப்பட்ட – பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாம் முன்னுரிமை வழங்கியுள்ளோம். கட்டி முடிக்கப்படும் வீடுகள் காணி உரிமையுடன்தான் கையளிக்கப்படும். கடந்த காலங்களில் போன்று கண்டி உட்பட சில மாவட்டங்களில் வழங்கப்பட்டதுபோல் காட்போட் காணி வழங்கப்படமாட்டாது.

கண்டி, ஹந்தானை பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றியே வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. எதிரணி மலையக அரசியல்வாதிகள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும்கூட ஹந்தானை பகுதியில் உள்ள அரச காணியை நாம் மக்களுக்கு பிரித்துகொடுக்கத்தான் போகின்றோம்.

காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வைத்து அரசியல் நாடகம் நடத்தி வந்தவர்கள், இவற்றுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயல் வடிவம் கொடுத்து வருவதால் நடுங்கியுள்ளனர். கடந்த அரசின் இரு அமைச்சுகளையும், இராஜாங்க அமைச்சு பதவிகளையும் வைத்து செய்ய முடியாவற்றை தனி ஒருவனாக ஜீவன் செய்து காட்டியுள்ளதால் வன்மத்தை அவர்மீது வெளிப்படுத்த முற்படுகின்றனர்.

காலையில் எதிரணியிலும் இரவில் அரச தரப்புடனும் டீல் அரசியல் நடத்தும் இவர்களை விமர்சிப்பதுகூட எமக்கு இழுக்குதான். இருந்தாலும் சமூகத்தின் போலி கருத்துகளை விதைத்து மக்களை குழப்பக்கூடாது. அதனால்தான் இந்த தெளிவுபடுத்தல்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply