• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆனந்தக் கண்ணீர் வழிய....

சினிமா

அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவின் மைக்குக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார் மலேஷியா வாசுதேவன்.
அப்போதுதான் இளையராஜா இசையில் இரண்டு பாடல்களை பாடி முடித்திருந்தார் அவர். இன்னமும் மூன்று பாடல்களை பாட வேண்டும்.
இந்த நேரத்தில் மலேஷியா வாசுதேவன் அருகில் வந்தார் இளையராஜா.
"டேய் வாசு, கமலுக்கும் ரஜினிக்கும் உன் வாய்ஸ் நல்லா செட் ஆகுது.  சிவாஜிக்கும் உன்னோட வாய்ஸை யூஸ் பண்ணலாம்னு இருக்கேன். எதுக்கும்  தயாரா இரு."
சொல்லி விட்டு இசைக் குழுவினரை நோக்கி திரும்பி நோட்ஸ் கொடுக்க ஆரம்பித்தார் ராஜா.
கண்கள் கலங்க இளையராஜா நின்றிருந்த திசை நோக்கி தன்னை அறியாமல் கை எடுத்து வணங்கினார் மலேஷியா வாசுதேவன்.
ஏனெனில் வறண்டு போன பாலை நிலமாக இருந்த மலேஷியா வாசுதேவன் வாழ்க்கையில் மகிழ்ச்சிப் பூக்களை தூவியவர் இளையராஜாதான்.

1973 இல் இருந்து சினிமாவில் பாடிக் கொண்டுதான் இருந்தார் மலேஷியா. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் ஹிட் ஆகவில்லை.
1977. பதினாறு வயதினிலே.
அந்தக் காலகட்டத்தில் ஒரு நாள் மலேஷியா வாசுதேவனை திடீரென அழைத்தார் இளையராஜா.
"டேய் வாசு. டிராக் ஒண்ணு இருக்கு. அதுவும் கமலுக்குப் பாட வேண்டிய பாட்டு. நீ சரியாப் பாடிட்டா இந்தப் படத்துலேருந்தே உனக்கொரு தனி இடம் கிடைச்சுடும். உன்னோட வெற்றிப் பயணம் ஆரம்பமாயிரும்டா. நல்லாப் பாடு."
"செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா..."
"ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.."
இரண்டு பாடல்கள்...
எஸ்.பி.பி. பாட வேண்டியது.
ஏதோ ஒரு காரணத்தால் அவரால் வர முடியவில்லை. டென்ஷனாக இருந்தார் இயக்குனர் பாரதிராஜா.
'பரவாயில்லை' என்று அவரிடம் சொன்ன இளையராஜா, "இப்போது வேறு யாராவது ஒருவரை வைத்து டிராக் எடுத்துக் கொள்ளலாம். நாளை எஸ்.பி.பி. வந்தவுடன் அவரைப் பாடச் சொல்லி அதை இணைத்துக் கொள்ளலாம்."
பாரதிராஜா அரை மனதோடு சம்மதம் சொன்னவுடன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மலேஷியா வாசுதேவனை அழைத்தார் இளையராஜா.
விஷயத்தை சொன்னார்.
அப்புறம் என்ன ?
அற்புதமாக மலேஷியா வாசுதேவன் அந்தப் பாடலை பாடி விட, அதைக் கேட்ட பாரதிராஜா, "ஃபண்டாஸ்டிக். இந்த வாய்ஸே இருக்கட்டுமே" எனச் சொல்லி விட,
வாய்ப்புகள் வந்து குவிய,
மலேஷியா வாசுதேவன் காட்டில் பணமும் புகழும் மழையாக பொழிய ஆரம்பித்தது. பல கால பொறுமைக்குப் பலன் கிடைக்க ஆரம்பித்தது.
தான் சொன்னது போலவே சிவாஜிக்கும் பல பாடல்களை
மலேஷியா வாசுதேவனைக் கொண்டு பாட வைத்தார் இளையராஜா.
"நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா
வெள்ளை இளஞ் சிட்டுக்கள் 
வெற்றிக் கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதைத் தட்டுங்கள் விண்ணைத் தொடுங்கள்."
(ஒரு கூட்டுக் கிளியாக)
(20 பிப்ரவரி 2011
   நினைவு தினம்)
 

 

Leave a Reply