• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹேமந்த் இயக்கத்தில் சிவராஜ் குமார்- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சினிமா

'சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ' மற்றும் 'சைட் பி' படங்களின் வெற்றி இயக்குனர் ஹேமந்த் எம் ராவ், நடிகர் சிவராஜ் குமார் உடன் இணைந்து அடுத்த படத்தை துவங்குகிறார். இப்படத்தினை வி.ஜே.எப் - வைஷாக் ஜே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் வைஷாக் ஜே கவுடா தயாரிக்கிறார்.

இயக்குனர் ஹேமந்த் எம் ராவ் கூறியதாவது:-

ஒரு நடிகராக சிவராஜ் குமார் சாரின் அனுபவம் மிகப்பெரியது, அவர் தனது முழு வாழ்க்கையிலும் மாறுபட்ட பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். ஒரு இயக்குனராக என்னையும், அவரையும் உற்சாகப்படுத்தும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அவருடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.

மேலும் இயக்குனர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், 'எனது 5-வது படத்தில் லெஜண்ட் சிவராஜ்குமாருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையாக உள்ளது. நான் எப்போதுமே ஒவ்வொரு படத்தையும் என்னுடைய முதல் மற்றும் கடைசிப் படம் போல நினைத்தே பணியாற்றிவருகிறேன். வைஷாக் ஜே கவுடாவுடன் இந்த பயணத்தை மேற்கொள்வதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக தயாரிப்பாளரான வைஷாக் ஜே கவுடா கூறியதாவது:-

'சிறுவயதில் இருந்தே நான் சிவண்ணாவின் தீவிர ரசிகன். அவர் நடிக்கும் ஒரு படத்தின் மூலம் நான் திரையுலகில் நுழைய வேண்டும் என்று விரும்பினேன். எங்கள் முதல் திரைப்படத்திற்காக ஹேமந்த் எம் ராவ் மற்றும் சிவண்ணாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு படத்தை வழங்க வேண்டிய பொறுப்பு, இப்போது எங்களுக்கு பத்து மடங்காக அதிகரித்துள்ளது.

படத்தின் ஜானர் மற்றும் நடிகர்கள் என படத்தின் தகவல்கள் குறித்து எந்த விஷயத்தையும் படக்குழுவினர் பகிரவில்லை. கூடிய விரைவில் ஒவ்வொன்றாக படம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என இயக்குனர் ஹேமந்த் எம் ராவ் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply