• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பி. சுசிலாவே பலமுறை ரீடேக் வாங்கிய பாடல்

சினிமா

பி. சுசிலாவே பலமுறை ரீடேக் வாங்கிய பாடல்; பாட மறுத்தும் விடாத எம்.எஸ்.வி; கடைசியில் கிடைத்த விருது

1968-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் உயர்ந்த மனிதன். சிவாஜி கணேசன், சவுக்கார் ஜானகி இணைந்து நடித்த இந்த படத்தில், மேஜர் சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்த பி.சுசீலா பாடவே முடியாது என்று அழுதுகொண்டே சொன்ன ஒரு பாடலை இசையமைப்பாளர் எம்.எஸ்.வி கட்டாயப்படுத்தி பாட வைத்ததும், அதற்கு சுசிலா பலமுறை டேக் வாங்கியது சினிமாவில் பலரும் அறிந்திடாத ஒரு தகவல்.

1968-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் உயர்ந்த மனிதன். சிவாஜி கணேசன், சவுக்கார் ஜானகி இணைந்து நடித்த இந்த படத்தில், மேஜர் சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில், அசோகன், மனோரமா, சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் வரும் ‘’நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஒரு பாடலாக உள்ளது. வாலி எழுதிய இந்த பாடலுக்கு தனது குரலின் மூலம் உயிர் கொடுத்தவர் தான் பி.சுசிலா. இந்த பாடல் பதிவின் போது, என்னால் இந்த பாடலை பாட முடியாது என்று சுசிலா அழுதுகொண்டே கூறியுள்ளார். ஆனால் அவரை விடாத எம்.எஸ்.வி, அப்படி சொல்லக்கூடாது நீதான் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.

அதன்பிறகு பாட தொடங்கிய பி.சுசீலா பலமுறை ரீ-டேக் வாங்கியுள்ளார். ஆனாலும், எம்.எஸ்.வி விடாமல் மீண்டும் மீண்டும் பாட சொல்ல, ஒரு கட்டத்தில் சோர்ந்து போன பி.சுசீலா, என்னால் இந்த பாடலை பாட முடியாது. நீங்கள் வேறு யாரையாவது வைத்து பாடலை பதிவு செய்துகொள்ளுங்கள் என்று அழுதுகொண்டே அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு இருக்கிறார். ஆனால் எம்.எஸ்.வி விடவில்லை.

மீண்டும் மீண்டும் அவரை ரீ-டேக் எடுத்து பாட வைத்த எம்.எஸ்.வி பாடல் பதிவு முடித்தவுடன், இன்று நீங்கள் பாடிய இந்த பாடல் உங்களுக்கு பெரிய பெயரை பெற்று தரும். அந்த அளவிற்கு நீங்கள் உழைப்பை கொடுத்திருக்கிறீர்கள் என்று பாராட்டியுள்ளார். இந்த பாடலுக்கு தான் பி.சுசீலாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply