• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சொக்கி இழுக்கும் குரல் மூலம் நடிகைகளை மனதில் பதிய வைத்த எஸ்.ஜானகி!. அட இத்தனை பாடல்களா!..

சினிமா

இளையராஜாவின் இசையில் பல பாடகிகள் பல பாடல்களை பாடியிருந்தாலும் எஸ்.ஜானகி எப்போதும் ஸ்பெஷல்தான். கருப்பு வெள்ளை காலத்திலேயே சில பாடல்களை பாடிய ஜானகி உச்சம் தொட்டது இளையராஜா இசையில்தான். அவரின் இசையில் அவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பெற்றிருக்கிறது. ஜானகி ஒரு நடிகைக்கு பாடினால் அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த நடிகை நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு தனது வசீகரமான குரல் மூலம் பல நடிகைகளை ரசிகர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார்.

சுஜாதா என்கிற நடிகையை ‘மச்சான பாத்தீங்களா. என் மலவாழ தோப்புக்குள்ளே’ பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியவர் ஜானகிதான். ஸ்ரீதேவியை ரசிகர்கள் கதாநாயகியாக ஏற்றுக்கொள்ள வைத்ததே ஜானகி அவருக்கு பாடிய ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’ பாடல்தான்.

80களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. அவருக்கு ஜானகி பாடிய ‘அடுக்கு மல்லிகை ஆள் புடிக்குது’ பாடலை எப்போதும் மறக்கவே முடியாது. அதேபோல், 80களில் கதாநாயகிய கலக்கிய ரேவதி. இவருக்கு ‘சின்ன சின்ன வண்ணக்குயில்.. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு’.. ‘இஞ்சி இடுப்பழகி’ ஆகிய பாடல்களை ஜானகி பாடியிருக்கிறார். அதேபோல், கடலோரக்கவிதைகள் ரேகாவுக்கு ஜானகி பாடிய ‘அடி ஆத்தாடி’ பாடல் எப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட்தான்.

ரோகிணி என்கிற நடிகையை ஒரே பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைய வைத்தார் ஜானகி. அதுதான் மறுபடியும் படத்தில் இடம்பெற்ற ‘ஆசை அதிகம் வச்சி மனச அடக்கி வைக்கலாமா’ பாடல். ரஞ்சிதா எனும் நடிகையை ‘மலரே மௌனமா’ மற்றும் கண்ணா என் சேலைக்குள்ள கட்டறும்பு புகுந்திருக்கு எதுக்கு’ பாடல்களை பாடி பிரபலமாக்கினார்.

சிம்ரன் பல படங்களில் நடித்திருந்தாலும் ஜோடி படத்தில் ஜானகி அவருக்கு பாடிய ‘காதல் கடிதம் காட்டவே மேகம் எல்லாம் காயிதம்’ பாடல் அவருக்கு எத்தனை காதல் கடிதங்களை கொண்டு வந்ததோ தெரியவில்லை. குணா படத்தில் நடிகையை பலருக்கும் தெரியாது. ஆனால், அவருக்கு ஜானகி பாடிய ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த நடிகை ரசிகர்களுக்கு நினைவில் வருவார்.

ஒரு கதாநாயகிக்கு இப்படி ஒரு அறிமுகப்பாடல் கிடைத்தால் எவ்வளவு உச்சத்துக்கு போவார் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் குஷ்புவுக்கு ஜானகி பாடிய ‘இவள் ஒரு இளங்குருவி’ பாடலாகும். ராதாவின் கதாநாயகி அந்தஸ்த்தை ஒரு படி மேலே உயர்த்தியதுதான் ஜானகி அவருக்கு பாடிய ‘ஊருசனம் தூங்கிடிச்சி.. ஊத காத்தும் அடிச்சிடுச்சி’ பாடலாகும்.

ஒரு கதாநாயகியின் முகம் 100 சதவீதம் ஜானகிக்கு பொருத்தமாக இருக்கும் எனில் அது அம்பிகாதான். அவருக்கு ஜானகி பாடிய ‘பாடவா என் பாடலை’ பாடலை இப்போதும் பல பெண்கள் இசை கச்சேரிகளில் பாடி வருகிறார்கள். ரோஜாவை ரசிகர்கள் கொண்டாடியதற்கு காரணமே ஜானகி அவருக்கு பாடிய ‘பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட’ பாடல்தான். பானுப்பிரியா பல பாடல்களில் நடித்திருந்தாலும் ’கீரவாணி இரவிலே கனவிலே’ பாடல் அவருக்கு நல்ல அறிமுகமாக இருந்தது.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply