• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இவர்தான்பா சூப்பர் ஹீரோ! சரித்திரம் படைத்த சமுத்திரக்கனியின் முத்தான மூன்று படங்கள்

சினிமா

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் சமுத்திரக்கனி. தமிழை விட தெலுங்கில்தான் மிகவும் தேடப்படும் நடிகராக மாறியிருக்கிறார். சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான சமுத்திரக்கனி தொடர்ந்து பல நல்ல நல்ல படங்களை இந்த சினிமாவிற்காக கொடுத்திருக்கிறார்.

அது நடிகராகவும் சரி இயக்குனராகவும் சரி அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் மக்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவே அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தன் ஊர் வழக்கில் பேசும் வசனங்களாகட்டும் தன் எதார்த்தமான நடிப்பாகட்டும் அனைவரையும் தன் வசப்படுத்துவதில் வல்லவர். ஒரு டாப் ஹீரோவுக்கு இருக்கும் அந்தஸ்து சமுத்திரக்கனிக்கும் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

சமீபகாலமாக பெரிய பெரிய முன்னனி ஹீரோக்களை தேடி அதுவும் கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்து ஒரு படத்தை எடுக்க படாத பாடும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மத்தியில் எந்தவொரு மாஸ் ஹீரோவும் இல்லாமல் தன் கதையின் மூலம் மட்டுமே தரமான படங்களை கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. அப்படிப்பட்ட படங்களில் முத்தான மூன்று படங்களை பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.

முதலில் ‘சாட்டை’ திரைப்படம். எம். அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் சாட்டை. இந்தப் படத்தை சமுத்திரக்கனி ஒரு மதிப்புக்குரிய ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒவ்வொரு பள்ளி மாணவனும் தன் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறானோ அதே போல் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த பள்ளி மாணவர்களின் நெஞ்சங்களில் குடிபோனார் சமுத்திரக்கனி. இன்றளவும் சாட்டை திரைப்படத்திற்கு ஒரு பெரிய மரியாதையே இருந்துவருகிறது.

அடுத்ததாக ‘அப்பா’ திரைப்படம். சமுத்திரக்கனி இயக்கத்திலும் நடிப்பிலும் வெளிவந்தப் படம்தான் அப்பா. பல பெற்றோர்கள் தங்களின் ஆசைகளை தன் பிள்ளைகளின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள ஆசைப்படுவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த பிள்ளைகளின் மீது அதிகமான சுமைகளை திணிக்கவும் முற்படுவார்கள். அதனால் அந்த பிள்ளைகள் படும் அவஸ்தையை சொல்லிமாளாது. இந்த கதைக் கருவுடன் வெளிவந்த படம்தான் அப்பா. இந்தப் படத்தில் சிறந்த ஒரு அப்பாவாக சமுத்திரக்கனி நடித்திருப்பார். ஒவ்வொரு அப்பாவும் அவரவர் பிள்ளைகளுக்கு ஹீரோவாகவும் நல்ல நண்பனாகவும் இருக்க வேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டியிருப்பார்.

அடுத்த படம் ‘வினோதய சித்தம்’. சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடிப்பில் வெளிவந்த படம்தான் வினோதய சித்தம். ஓடிடியில் ரிலீஸான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மிகவும் கண்டிப்பான மனிதராக நடித்திருக்கும் தம்பி ராமையா ஒரு கட்டத்தில் விபத்தை சந்திக்க காலன் தம்பி ராமையாவை தேடி வருகிறான்.

அப்போது காலனிடம் தம்பி ராமையா எனக்கு இன்னும் சில வேலைகள் இருக்கிறது. அதனால் கொஞ்சம் அவகாசம் கொடு என கேட்க, அதற்கு காலனும் சரி என சொல்லி 90 நாள்கள் அவகாசம் கொடுக்கிறார். அந்த நாள்களில் தம்பி ராமையா என்னெல்லாம் செய்கிறார் என்பதுதான் கதை. காலனாக சமுத்திரக்கனிதான் நடித்திருப்பார். இவர் ஒரு தேர்ந்த நடிகர் என்று சொல்ல இந்த ஒரு படம் போதும். அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சமுத்திரக்கனி.

தேன்மொழி 

Leave a Reply