தந்தையின் தலையை வெட்டி சமூக ஊடகத்தில் காணொளியாக வெளியிட்ட கொடூரன்
அமெரிக்காவில் நபர் ஒருவர் சொந்த தந்தையின் தலையை வெட்டி சமூக ஊடகத்தில் காணொளியாக வெளியிட்டுள்ளதுடன் அரசியல் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய நபரை கைது செய்துள்ளதுடன், அந்த காணொளியும் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 32 வயதான ஜஸ்டின் மோன் பென்சில்வேனியாவில் அவரது 68 வயது தந்தை மைக்கேல் மோனை கொலை செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
அவர் மீது முதல் நிலை கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது ஜஸ்டின் மோனின் தாயாரே 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார்.
தமது கணவரின் துண்டிக்கப்பட்ட தலை குடியிருப்பில் காணப்படுவதாக அவர் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளார். மதியம் 2 மணி வரையில் தாம் அந்த குடியிருப்பில் இருந்ததாகவும், அதன் பின்னர் வெளியே சென்றுவிட்டு திரும்பிய நிலையில் இந்த கோர சம்பவம் கண்ணில் பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், தலையற்ற நிலையில் சடலத்தை மீட்டுள்ளதுடன், வாள் மற்றும் சமையலறை கத்தி ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.
அத்துடன், 20 ஆண்டுகள் அரசாங்க ஊழியராக பணியாற்றிய தமது தந்தை ஒரு தேசதுரோகி என்றும், அமெரிக்கா மிக மோசமாக சீரழிந்துள்ளதாகவும் காணொளியில் பதிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டவர்களை கடுமையாக விமர்சித்துள்ள அவர், பெடரல் தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பெடரல் சட்ட அமலாக்கத் துறையினரைத் தாக்க அமெரிக்கர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.