• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மருத்துவமனையில் மாறு வேடத்தில் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் அதிரடி

கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க உறுதியெடுத்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீன காசா பகுதியில் அவர்கள் மறைந்திருக்கும் பகுதிகளை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில், பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரத்தில் உள்ளது, இப்ன் சினா (Ibn Sina) மருத்துவமனையில் பொது மக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் போல் உடையணிந்த இஸ்ரேலிய ராணுவ படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ராணுவ படையை சேர்ந்த கமாண்டோ வீரர்கள், நர்சுகள், ஹிஜாப் அணிந்த பெண்கள் மற்றும் நோயாளிகள் போல் வேடமணிந்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் தங்கள் ஆடைகளுக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர்.

மருத்துவமனையின் 3-ஆம் தளத்திற்கு நேரடியாக விரைந்து சென்ற அவர்கள், அங்கு 3 சிகிச்சை பெற்று வந்த பாலஸ்தீனியர்களை சுட்டு கொன்றனர்.

அந்த 3 பேரும் பாலஸ்தீன ராணுவத்தின் "ஜெனின் ப்ரிகேட்ஸ்" (Jenin Brigades) எனும் பிரிவை சேர்ந்தவர்கள் என ஹமாஸ் கூறியது.

ஆனால், கொல்லப்பட்ட 3 பேரும் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்றும் அவர்களில் மொஹம்மெட் ஜலாம்னெஹ் எனும் முக்கிய பயங்கரவாதிக்கு குறி வைத்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கையை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விர் பாராட்டினார்.

இந்த அமைப்புடன் தொடர்பில்லாத இரு சகோதரர்களும் இந்த கமாண்டோ நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் ராணுவ படையான அல் கசாம் ப்ரிகேட்ஸ் (Al Qassam Brigades) உயிரிழந்த மூவரும் வீர மரணம் அடைந்துள்ள உறுப்பினர்கள் என தெரிவித்தது.

இச்சம்பவத்தை தொடர்ந்து பாலஸ்தீன சுகாதார துறை ஐ.நா.வின் பொதுச்சபை மற்றும் தன்னார்வல அமைப்பினர் அவசரகால மருத்துவ பணியாளர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
 

Leave a Reply