• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இடிச்சபுளி செல்வராஜ்

சினிமா

நகைச்சுவை நடிகர், இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் பாண்டு அவர்களின் அண்ணனுமான "இடிச்சபுளி செல்வராஜ்" அவர்களின் 12வது ஆண்டு நினைவு நாள்.

எம்ஜிஆர் இருக்கும் வரை வேறு படங்களில் நடிக்காத இடிச்சபுளி செல்வராஜ்.. திருமண நாளில் நடந்த சர்ப்ரைஸ்!

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் இடிச்சபுளி செல்வராஜ். இவர் சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவரை பலர் சினிமாவில் பார்த்திருந்தாலும் இவரது பெயரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இடிச்சபுளி செல்வராஜ் தமிழ் திரை உலகில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். ஒரு சில எம்ஜிஆர் படங்களுக்கு உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் நடித்த இதயக்கனி, உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய இரண்டு படங்களிலும் இவர் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் தான் ஒரு சிறு கேரக்டரில் அறிமுகமானார். அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து எம்ஜிஆர் நடித்த ஒளிவிளக்கு திரைப்படத்தில் நடித்தார். எம்.ஜி.ஆர் படங்களில் மட்டுமே இவர் நடித்து கொண்டிருந்த நிலையில், வேறு சில படங்களில் வாய்ப்பு வந்த போதிலும் எம்ஜிஆர் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

எம்ஜிஆர் நடித்த ராமன் தேடிய சீதை, இதயவீணை, பட்டிக்காட்டு பொன்னையா, நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், பல்லாண்டு வாழ்க, உழைக்கும் கரங்கள், இன்று போல் என்றும் வாழ்க ஆகிய திரைப்படங்களில் நடித்தார். எம்ஜிஆர் தேர்தலில் நின்று முதலமைச்சர் ஆன பின்னர் தான் இடிச்சபுளி செல்வராஜ் முதல் முதலாக ரஜினிகாந்த் நடித்த தர்மயுத்தம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

திரைக்கு வந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து எம்ஜிஆர் அல்லாத நடிகர் ஒருவரின் படத்தில் இடிச்சபுளி செல்வராஜ் நடித்தார். அதன் பிறகு ரஜினியின் மூன்று முகம், தாய் வீடு, டி ராஜேந்தரின் தங்கைக்கோர் கீதம், விஜயகாந்த் நடித்த நல்ல நாள், அலை ஓசை, ரஜினிகாந்த் நடித்த வேலைக்காரன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். இவர் தமிழ் திரை உலகில் மட்டும் கிட்டத்தட்ட 500 படங்கள் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆரிடம் இரண்டு படங்களில் உதவியாளராக வேலை பார்த்தாலும் பல வருடங்கள் ஆகிவிட்டதால் அவர் தனது திருமணத்திற்கு எம்ஜிஆர்-ஐ அழைக்க விரும்பவில்லை. தன்னை அவர் ஞாபகம் வைத்திருப்பாரோ என்று தான் அவருக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவருடைய நண்பர்கள் ராமாபுரம் தோட்டம் சென்று எம்ஜிஆர் சந்தித்து திருமண பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதனை அடுத்து அவர் எம்ஜிஆரை நேரில் சந்தித்து திருமண பத்திரிகை கொடுத்தார். கண்டிப்பாக திருமணத்திற்கு வருகிறேன் என்று எம்ஜிஆர் வாக்குறுதி அளித்திருந்தாலும் அவருக்கு வேறு சில பணிகள் இருந்ததால் திருமணத்திற்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்காக பேனர்கள் கட் அவுட் வைத்திருந்த அவர் ஏமாற்றம் அடைந்தார். ஆனால் மறுநாள் அவர் மாமியார் வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென எம்ஜிஆர் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு மணமக்களை வாழ்த்தி ஒரு மிகப்பெரிய தொகையையும் அன்பளிப்பாக கொடுத்தார்.

மேலும் எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் நீங்கள் தாராளமாக கேட்கலாம் என்று சொன்னதை அடுத்து அவர் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தார். இந்த நிலையில் இடிச்சபுளி செல்வராஜ் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல் நல குறைவு காரணமாக காலமானார். அவர் மறைந்தாலும் அவர் நடித்த பல படங்கள் இன்னும் இடிச்சபுளி செல்வராஜ் அவர்களை  ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thiyaghu Ktr

Leave a Reply