• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எப்படி இப்படி ஓப்பனா இருக்கீங்க?!. கேள்வி கேட்டவருக்கு எம்.ஆர்.ராதா சொன்ன நச் பதில்!..

சினிமா

பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர்தான் எம்.ஆர்.ராதா. மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசியவர் இவர். மிகவும் சுயமரியாதையோடு வாழ்ந்தவர். தன்மானத்திற்கு ஒரு இழுக்கு என்றால் உடனே கொதித்து எழுந்துவிடுவார். எவ்வளவு பெரிய நடிகர், இயக்குனர் என்றாலும் அவர்களிடம் கோபத்தை காட்டி விடுவார்.

அதேநேரம், அவர் மிகவும் நல்லவரும் கூட. அதனால்தான் அவரால் கோபப்பட முடிந்தது. இவரின் நடிப்பில் வெளிவந்த ரத்தக்கண்ணீர் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பெரியார் மற்றும் அண்ணா மீது அன்பு கொண்டிருந்தவர். தனது நாடகங்களில் புரட்சிகரமான கருத்துக்களை பேசியதோடு, கடவுள் நம்பிக்கையை கடுமையாக கிண்டலடித்தவர்.

இதனால் பல எதிர்ப்புகளையும் சந்தித்திருக்கிறார். ஆனாலும், எப்போதும் யாருக்காவும் அவர் பயந்தது இல்லை. ஒரு பண பிரச்சனையில் எம்.ஜி.ஆரின் கழுத்தில் சுட்டு சில வருடங்கள் சிறையிலும் இருந்தார். இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து கொண்டார். அதை எப்போதும் எங்கும் அவர் மறைத்தது இல்லை.

இவரின் வாரிசுகள் எம்.ஆர்.வாசு, வாசு விக்ரம், ராதாரவி, ராதிகா, நிரோசா என பலரும் சினிமாக்கு வந்தார்கள். நடிகர் சிவாஜியையும், எம்.ஜி.ஆரையும் சிறு வயது முதலே எம்.ஆர்.ராதாவுக்கு தெரியும். அந்த காலத்தில் எல்லோரும் நாடகங்களில் நடித்தவர்கள்தான். சிவாஜியை சினிமா நிறுவனங்களுக்கு அழைத்து சென்று அவருக்காக வாய்ப்பு கேட்டவர்தான் எம்.ஆர்.ராதா.

செய்தியாளர் சந்திப்போ இல்லை பத்திரிக்கையாளர் பேட்டியோ எதையும் மறைக்காமல் அப்படியே பேசுபவர் எம்.ஆர்.ராதா. ஒருமுறை அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் ‘எப்படி எப்போதும் ஒளிமறைவு இல்லாமல் உங்களால் பேசமுடிகிறது?’ எனக்கேட்க அதற்கு எம்.ஆர்.ராதா சொன்ன பதில் இதுதான்.

ஒரு நடிகனின் நிறை மட்டுமல்ல. அவனின் பலவீனங்களையும் ரசிகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீது இருக்கும் பிம்பம் மாறும். பொய்யாகவோ, இல்லாததையோ சொல்லி ஒரு போலி இமேஜை உருவாக்குவதில் எனக்கு விருப்பமில்லை’ என சொன்னார் எம்.ஆர்.ராதா. அதேபோல், நடிகர்களுக்கு நடிப்பு என்பது அவர்களின் தொழில். அவர்களை கடவுளை பார்ப்பது முட்டாள்தனம். அவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டிய அவசியமில்லை’ என்று சொன்னவரும் எம்.ஆர்.ராதாதான்.

Rj Nila 

Leave a Reply