• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த நடிகர் முரளி

சினிமா

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் முரளி. அவர் நடித்த படங்களில் காதலுக்கு என தனி கவனம் செலுத்தி கதையை தேர்வு செய்து நடித்திருப்பார்.

கன்னட படங்களின் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமான முரளி பூ விலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனார். தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் முரளி.

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் முரளி. கர்நாடக மாநிலம் பெங்களூரில் 1964-ஆம் ஆண்டு மே 19-ம் தேதி பிறந்தார். 1984-ஆம் ஆண்டு 'பிரேம பர்வா’ என்ற கன்னட திரைப்படம் மூலம் திரை உலகில் நுழைந்த முரளி தமிழில் 'பூ விலங்கு' படத்தின் மூலம் பிரபலமானார். முதல் திரைப்படத்திலேயே தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய முரளி, இயக்குனர் மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படமான ‘பகல் நிலவு’ வின் நாயகனானார்.

தொடர்ந்து 1990-ல் இயக்குனர் விக்ரமனின் முதல் திரைப்படமான ‘புதுவசந்தம்’ முரளிக்கு புது அடையாளத்தை பெற்று தந்தது. காதல் படங்களுக்கு தனி இலக்கணம் வகுத்த முரளியின் திரைப் பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது ‘இதயம்’. காதலை கடைசி வரை சொல்லாமலேயே கண்களில் தேக்கி வைத்து பண்பட்ட நடிப்பை வழங்கி இருப்பார் முரளி. கன்னட சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநர் சித்த லிங்கய்யாவின் மகனான நடிகர் முரளி தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளியான 'கடல் பூக்கள்' படத்துக்காக 2000-ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருதை பெற்றார். சிவாஜி, விஜயகாந்த், பிரபு, சரத்குமார், சத்யராஜ், வடிவேலு, பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ‘ஆனந்தம்’ , ‘சமுத்திரம்’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘பொற்காலம்’, ‘கனவே கலையாதே’ போன்ற திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பால் அசத்தி பல ரசிகர்களுக்கு பிடித்த நடிகர் ஆனார் முரளி. ‘சுந்தரா டிராவல்ஸ்’ மூலம் வடிவேலுவுடன் இணைந்து காமடியிலும் ரசிக்க வைத்தார்.

இவர் கடைசியாக நடித்த படம் 'பாணா காத்தாடி'. அவருடைய மூத்த மகன் அதர்வா நாயகனாக அறிமுகமான திரைப்படம். தனது இயல்பான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த முரளி செப்டம்பர் 8, 2010 அன்று 46வது வயதில் மாரடைப்பால் காலமானார். காதல் திரைப்படங்களுக்கு இலக்கணம் வகுத்த முரளி என்றும் தமிழ் சினிமாவின் இதயம் நிறைந்தே இருப்பார்.
 

Leave a Reply