• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விபரீத துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு விழித்துக் கொள்ளும் அரசு

மத்திய ஐரோப்பாவில் உள்ள 1.25 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு, செக் குடியரசு (Czech Republic). இதன் தலைநகரம் பிரேக் (Prague).

செக் நாட்டில், பொதுமக்கள் துப்பாக்கிகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று எந்த கட்டுப்பாடும் இன்றி அதனை வாங்குவது மிக எளிது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னை காத்து கொள்ள துப்பாக்கி வைத்திருப்பதை அடிப்படை உரிமையாக அந்நாட்டு அரசியல் சட்டம் அனுமதிக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம், செக் குடியரசின் பிரபலமான சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு 24 வயது பட்டதாரி மாணவன், திடீரென அங்கு இருந்தவர்களை நோக்கி தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

மாணவன் சுட்டதில், சக மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

பிறகு, அந்த மாணவன் வேறு ஒரு ஏஆர்-10 ரக துப்பாக்கியை எடுத்து பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு வாசலில் அங்கும் இங்கும் நடந்தவாறு பிறரை மிரட்டினான்.

கொலை வெறியுடன் சுற்றிய மாணவனிடமிருந்து தப்பிக்க பல மாணவர்கள் பல்கலைக்கழக் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஜன்னல்களுக்கு கீழே ஒளிந்து கொண்டனர்.

காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர். அவனை பிடிக்க சிலர் முயலும் முன்பாக வேறு ஒரு சிறு துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தான்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது.

விசாரணையில், மன அழுத்தம் காரணமாக அவன் இவ்வாறு செய்ததாகவும், அவனிடம் 7 துப்பாக்கிகள் இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, செக் குடியரசின் 281 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றம் அவசர அவசரமாக கூடியது.

சம்பவம் நடந்து சுமார் 1 மாதம் கடந்த நிலையில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் ஒரு சட்ட திருத்தத்திற்கு கீழ் சபை முன்மொழிந்துள்ளது. மேல்சபையான "செனட்" ஒப்புதல் அளித்து, ஜனாதிபதி கையெழுத்திட்டால் இது சட்டமாகி விடும்.

2026ல் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

"உலகின் அமைதியான நாடுகள்" பட்டியலில் ஐரோப்பிய நாடுகளில் செக் குடியரசு, 8-வது நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply