• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகா கவிதையின் எண்மக் கணக்கு

இலங்கை

இதுவரை உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளிவந்த எந்த ஒரு கவிதை நூலிலும்,
எண் கணக்கு
மனக் கணக்கு
இயற்பியல்
வேதியியல்
உயிரியல்
சூழ்நிலை அறிவியல்
விண்வெளி விடயங்கள்
வானிலை கள நிலவரம்
தரவு அறிவியல்
இவற்றோடு,
இலக்கிய சாரலில், அழகிய நடையில், சம்பா நெல்நாத்து நடும் முத்தம்மாவும் நியூரான் நரம்பிழைகளை கொஞ்சம் கசக்கிப் பிழியத் தோணுமளவிற்கு இருந்திருக்குமா என்றால் 31-டிசம்-2023 அன்று வரை இல்லை என்று தான் பதில் வந்திருக்கும்.

ஆனால் 01-சனவரி-2024 முதல் மொத்த உலகத்தின் எல்லா அறிவியல் சார்ந்த பாடங்களும், தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் தொடங்கியது என்று தான் சொல்ல வேண்டும். இனி வரும் காலத்தில் எல்லா விண்வெளி மையங்களில், அப்படிப்பட்ட ஒரு மகா நூல் மையத்தில் வைக்கப்படும். அங்கு புவி ஈர்ப்பு விசையும், ராக்கெட்டும் வரிசையில் நின்று பாடம் படிக்கக் கூடும். இலக்கியவாதிகள் வாதிடாமலேயே கெப்ளர்,ஐன்ஸ்டீன், நியூட்டன்,கோபர்கிக்கஸ் விதிகளின் தேற்றத்தை தேடித் தேடி படிக்க முயலலாம். காலநிலை, பருவநிலை மாற்றத்தை முன்னெடுத்து வைக்கும் சமூக ஆர்வலர்கள்,அறிஞர்கள் இனிமேல் தங்கள் கருத்துக்களில் தொலைதூர ஆழத்திற்கு போகக்கூடும்.

ஆம் நண்பர்களே! கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்கள் எழுதிய "மகா கவிதை" என்ற நூல் இப்பேரண்டத்தில் உள்ள மக்களை சுகபோகமாக வாழ்வதற்கு தேவையான பஞ்ச பூதங்களின் இருப்பை மற்றும் இனி வரப்போகும் இருப்பையும், இழப்பையும் மிக விரிவாக கவிதை வடிவத்தில் வடித்துள்ளார். வார்த்துள்ளார். கணிதத் தமிழில் கூறியுள்ளார். விண்வெளித் தூரத்திற்கு நம்மை அருகில் அமர வைத்துள்ளார். பல்வேறு சாரம்சங்கள் அந்த நூலில் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும், அறிந்து கொள்வதற்கும் நிறைய உள்ளன. ஆனால் அதில் கூறப்பட்டுள்ள எண் சார்ந்த கணக்குகளை மட்டும் நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். காரணம் அந்த எண்கள் பற்றிய தகவல்களை சாதாரணமாக சேர்த்திருக்க முடியாது. அதற்காக அவர் பல நூல்களின் பல பக்கங்களை புரட்டிப் பார்த்திருக்க வேண்டும். அவர் பாணியில் சொல்ல வேண்டுமானால் மேகத்தை காகிதமாக்கி பல குறிப்புகள் எடுத்திருப்பார். அவருடைய பல சிந்தனைகளின் பருமனை தராசு போட்டு நிறுத்தி பார்த்திருப்பார். இதற்கு முன்னால் அவர் எழுதிய நூல்களில் சொல்லப்பட்ட இந்நூல் சார்ந்த கருத்துக்களை அவ்வப்போது உள்வாங்கி இருக்கக்கூடும். மொத்தத்தில் உலக நலனுக்காக பஞ்ச பூதங்களைக் காக்கும் பொருட்டு இந்தியாவின் தென்கோடியில் அன்னைத் தமிழில் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்.

அப்படிப்பட்ட கெட்டியான அட்டையுடன் கூடிய இந்த நூலின் பின்பக்கத்திலிருந்து தொடங்குகிறேன் இப்படியாக,
1 பூமி
2 திணை
3 காலம்
4 திசை
5 பூதம்

அந்த ஐம்பூதங்களை காக்கும் பொருட்டு, 2015 பாரிஸ் 195 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்று கூடி1.5 பாகை செல்சியஸ் வெப்பத்தை குறைக்க ஆலோசித்தார்கள். ஏனெனில் அவ்வெப்பம் குறையாவிடில் பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டம் உயர்ந்து பூமியை குடிக்கும் அபாயம் உள்ளது.

அப்படிப்பட்ட கடலை நாம் தூய்மையாக வைத்துள்ளோமா என்றால், கண்டிப்பாக இல்லை என்பதுதான் இசைவு. அதாவது 2050ம் வருடத்தில் கடலில் கலந்திருக்கும் நெகிழிகளின் எடை 1,124 மில்லியன் டன்களாக இருக்கும். அதை முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு 79,000 ஆண்டுகள் தேவைப்படுமாம்.

நிலம்
150 கோடி ஆண்டுகள் பூமியும், வானும் பேசிக்கொண்டதில்லை.
300 கோடி ஆண்டில் தான் பேசவே ஆரம்பித்ததாம்.
17 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் தோன்றிய கண்டங்கள் எல்லாம் சில்லு சில்லானது.
அவ்வகையில் பூமி இதுவரை 5 முறை அழிந்துள்ளது என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்கள் (அர்டோவிசியன், டெவோனியன், பெர்மியன், ஜூரசிக், கிரிட்டேசியஸ் காலம்).
மண்ணின் உயிர்ச்சாரத்தின் உயரம் 2.5 சென்டிமீட்டர்.

நீர்
இப்பூமியில் இருக்கும் மொத்த நீரில் 97% மனிதர்கள் குடிக்க உகந்ததல்ல. வெறும் 3% நீர்தான் சுத்த நீர். ஆனால் அதில் 1% நீர் பனிக்கட்டியாக உறைந்தும், 1% நீர் ஆழ்துளை கூட போட்டு எடுக்க முடியாத ஆழத்திலும் இருக்கிறது. வெறும் 1% நீர்தான் தவிச்ச வாய்க்கு தண்ணீரைத் தருகிறது.

இவ்வளவு தண்ணியா வேணும்?
ஒரு கார் உற்பத்தி செய்ய 4,00,000 லிட்டர்
ஒரு கோப்பை காப்பி தூள் தயாரிக்க 140 லிட்டர்
ஒரு ஞாயிற்றுக் கிழமை பிரதி செய்தித் தாள் வெளிவர 570 லிட்டர்
ஒரு கிலோகிராம் அலுமினியம் செய்ய 1340 லிட்டர்
ஒரு ரொட்டித் துண்டு செய்ய 435 லிட்டர்
ஒரு மெட்ரிக் டன் இரும்பை தயாரிக்க 270 மெட்ரிக் டன்

இங்கிலாந்து நாட்டின் 80% நீர் இரும்புத் தொண்டையில் மாட்டியுள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு மனிதனின் பயன்பாட்டிற்கு135 லிட்டர் நீரும், உண்ண 1.5 கிலோ உணவும், குடிக்க் 2 கிலோ குடி நீரும் மற்றும் சுவாசிக்க 9 கிலோ காற்றும் தேவைப்படுகிறது. சுகாதாரமான குடிநீர் இல்லாததால் வருடத்திற்கு 22,00,000 லட்சம் பேர் மாண்டு போகிறார்கள்.

தீ
பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது எரியும் வெப்பம் அதுதான் சூரியன்.
சூரியன் எத்தனை பெரியது என்றால் 10,00,000 பூமிகளை அதனுள் அடைக்க முடியும்.
450 கோடி ஆண்டுகள் அடித்த வெப்பம், இன்னும் 450 கோடி ஆண்டுகள் மட்டுமே எரியுமாம்.
சூரியனில் 6000 பாகை செல்சியஸ் வெப்பம் அடிக்கிறது. அதில் 9 2 கோடியில் ஒரு பங்கு தான் பூமிக்கு வருகிறது.
6 கோடி கிலோமீட்டர் தூரம் உள்ள புதன் கிரகமும், 600 கோடி கிலோமீட்டர் தூரம் உள்ள புளூட்டோ கிரகமும் சூரியனின் பிடியில் தான் உள்ளது.
94 மூலகங்கள் இங்கு அப்பிகி கிடக்கின்றன.
சூரியக் குடும்பத்தின் மொத்த எடையில் 99.8% சூரியனின் எடையே ஆகும்.

வளி
வளிமண்டலத்தில் 78% நைட்ரஜன், 22% மற்ற வாயுக்கள் உள்ளன. காற்றானது 19 கிலோமீட்டர் உயரம் வரை உலாவுகிறது.
இந்திய மக்கள் தொகையில் 40%பேர் —> 7.6 ஆண்டுகள் ஆயுள் குறைக்கப்படுகிறது.
1 கனமீட்டர் காற்றில் 10மைக்ரோ கிராம் நுண்துகள் இருந்தால் அதை மனிதன் சுவாசிக்கலாம். இதோ இதை உங்களுடைய திறன்பேசியிலோ, அல்லது அலைபேசியிலோ படித்துக் கொண்டிருக்கும் போது காற்றோடு கலந்த பின்பு தான் வந்தடைகிறது.
சீன சந்தையில் 3லிட்டர் புட்டிக்காற்று $32 காசுக்கு விற்கப்படுகிறது.

வெளி
இதில் கூறப்பட்டுள்ள எண்களைப் படிக்கும் போது பிரம்மிக்க வைக்கின்றன. இவ்வளவு விசயம் இருக்கிறதா என் தலையை சுற்றுகிறது. பிரபஞ்சம் இப்படி இருக்கும்போது பூமியில் மட்டும் விதிவிலக்கா என பல அறிவியல் விதிகளை கண்முன்னே வியக்க வைக்கிறது. அப்படிப்பட்ட அந்த எண்களை நீங்களே அந்த நூலில் படித்து பயனுறுங்கள். கண்டிப்பாக பயன் பெறுவீர்கள். அது இந்த மண்ணையும் சேர்த்து பயன்பெற வைக்கும் என்று ஆழமாக நம்புகிறேன்.

இந்த பிரபஞ்சம் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருஞ்சிதறலின் விளைவு. வெறுமனே அதை சிறுமையாக எண்ணிவிட வேண்டாம். அது நிலைத்திருக்க ஐம்பூதங்களை மாசுபடாமல் காக்க நம் கையில் ஏந்தி நிலை நிறுத்துவது தலையாயக் கடமையாகும். அதுதான் நம் தலைமுறைக்கு விட்டுச் செல்லும் விலைமதிப்பற்ற சொத்தாகும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்!

பி.கு: தகவல் பிழைகள் இருப்பின் அவை தரவுப் பிழைகள் ஆகும் என்ற கூற்றையும் நூலின் ஆசிரியர் ஐயா அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கவியெழுத்து விஜயகுமார் 
 

Leave a Reply