• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தங்கத்திலே குறை இருந்தாலும்... கண்ணதாசனின் இந்த மெகா ஹிட் பாடலில் பிழையா?

சினிமா

சிவாஜி கணேசனின் சிறந்த நடிப்பில் வெளியான 10 படங்களை எடுத்துக்கொண்டால் அதில் பாகபிரிவினை நிச்சயமாக முக்கிய இடத்தில் இருக்கும்.

சிவாஜி நடிப்பில் வெளியான பாகப்பிரிவினை படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் ஒரு வார்த்தை மாறியதால் பொருள் மாற்றியுள்ளது. கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் இன்றும் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ஒருவரை தேற்றி கொண்டு வருவது போல் அமைந்திருக்கும்.

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் நடிகராக சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1959-ம் ஆண்டு வெளியான படம் பாகப்பிரிவினை. சிவாஜியுடன், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, நம்பியார், பாலையா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்த நிலையில், சிவாஜி பட நிறுவனம் படத்தை வெளியிட்டது.

ஒரு கை விளங்காமல் இருக்கும் சிவாஜி, தாழ்வு மனப்பான்மையால் இருந்து வரும் நிலையில், அவர் குடும்பத்தில் உள்ளவர்களே, அவரை ஏளனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதில் இருந்து அவர் எப்படி மீண்டார் என்பது தான் படத்தின் கதை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிறந்த நடிப்பில் வெளியான 10 படங்களை எடுத்துக்கொண்டால் அதில் பாகப்பிரிவினை நிச்சயமாக முக்கிய இடத்தில் இருக்கும்.

அதேபோல் இந்த படம் வெளியாகி அப்போதைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியில் ரீமேக் செய்ய முயற்சித்தபோது, சிவாஜியின் ஊனமுற்ற கேரக்டரில் நடிக்க இந்திய நடிகர்கள் தயங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு தமிழில் சிவாஜி கண்ணையா என்ற கேரக்டரில் வாழ்ந்திருப்பார் என்று சொல்லலாம். அதேபோல் படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு முன்னதாக, கண்ணதாசன் – சிவாஜி கணேசன் இடையே மோதல் இருந்தபோதும், இந்த படத்திற்கு பின் இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தனர். இந்த படத்தின் கதை பற்றி, சிவாஜியின் வீட்டுக்கு சென்று அவரிடம் இயக்குனர், பீம்சிங், தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, கதை கேட்ட சிவாஜி கணேசன், காபி சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த சிவாஜியை பார்த்த இயக்குனர் பீம்சிங், வேலுமணி இருவருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். சிவாஜியாக உள்ளே சென்ற அவர் வெளியில் வரும்போது ஊனமுற்ற கண்ணையாவாக வந்துள்ளார். அந்த அளவிற்கு அவரை ஈர்த்த இந்த கதையில் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் வரும் தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறை உண்டோ என்ற பாடல் இன்றும் ஒரு சிறந்த மோட்டிவேஷன் பாடலாக உள்ளது.

இந்த பாடலில் முதலில் தங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் என்று தான் கண்ணதாசன் எழுதியுள்ளார். ஆனால் அதன்பிறகு தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் என்று மாறியுள்ளது. குறைவிருந்தாலும் என்பதற்கான பொருள், தங்கம் 24 காரட், அல்லது 22 காரட் என்பதை குறிப்பது. குறை இருந்தால் என்பது ஒரு பவுனில் ஒரு கிராம் குறைந்தாலும் அது தங்கம் தான் என்பது பொருள். ஒரு வார்த்தையில் பாடலின் பொருளை மாற்றியுள்ளார் கண்ணதாசன்.
 

Leave a Reply