• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் விசேட கொடுப்பனவை அதிகரிக்கத் தீர்மானம்

இலங்கை

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின், விசேட கொடுப்பனவை 25 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இந்த கொடுப்பனவை ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின்போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால், பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் விசேட கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இன்று காலை முதல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தினால் நாடளாவிய ரீதியாக உள்ள 17 பல்கலைக்கழங்களின் செயற்பாடுகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவுரையாளர்களுக்கு மாத்திரம் விசேட கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால், பல்கலைக்கழக கட்டமைப்பில் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகவும் கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

பதாகைகளை ஏந்தியவாறு இவர்கள் தங்களின் எதிர்ப்பினை காண்பித்தனர். வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களும் இன்று பல்கலைக்கழக வாயிலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தின் போது கல்வி சாரா ஊழியர்களின் சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் வாழ்க்கைச் செலவுக்கேற்ப கொடுப்பனவினை வழங்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

அதேநேரம், வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி, தாதியர்கள் நேற்று காலை ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் நேற்று ஸ்தம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply