• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜல்லிக்கட்டில் வெல்பவர்களுக்கு அரசு வேலை- அமீர் வைத்த கோரிக்கை

சினிமா

2002-ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தவர் அமீர். பின்னர் 'மௌனம் பேசியதே', 'ராம்', 'பருத்தி வீரன்', 'ஆதிபகவன்' போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' திரைப்படத்தில் இணைந்துள்ளார். இதனை சமீபத்தில் இயக்குனர் அமீர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் அமீர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,

"தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்

தெரிபு தெரிபு குத்தின ஏறு..

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்

புல்லாளே ஆய மகள்.."

என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், மதுரை அலங்காநல்லூரிலும், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

"தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!" என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

Leave a Reply