• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலி

இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலியானதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா கூறும்போது, "காசா பகுதி முழுவதும் நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் ஒரே நாளில் சுமார் 100 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்" என்றார்.

காசாவில் நிவாணர பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதுகுறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் கூறும்போது, "தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்த குழந்தைகள், அடிப்படை தேவையான தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பாதுகாப்பான தண்ணீர் இல்லாமல் வரும் நாட்களில் பல குழந்தைகள் இறக்க நேரிடும்" என்றார்.
 

Leave a Reply