• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாறாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகம் - அமைச்சர் கனக ஹேரத்

இலங்கை

அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்காக இரண்டு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த நிதியை டிஜிட்டல் மயமாக்கலுக்கு பயன்படுத்துவதன் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை மக்கள் அதன் பயனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்படும் வரை, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய வார்த்தைகள் இந்த நாட்டில் மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டன.

ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையினால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவை இலகுவாகப் பயன்படுத்த முடியும்.

இதன்படி, நாட்டின் பொருளாதாரத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் வழங்கி வந்த பங்களிப்பை 03 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், செயற்திறன் மிக்க அரச சேவையைப் பேணுவதற்கான சூழல் உருவாக்கப்படுகிறது.

அதன் ஊடாக போட்டித் தன்மை கொண்ட சேவைகளை வழங்குவதற்கு அரச சேவையை வலுப்படுத்தும் ஆற்றல் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உண்டு.

இந்த முழுமையான செயல்முறைகளின் மூலம் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply